உணவகங்கள், தேனீர் கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி.. எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள்?.. முழு விவரம்?
சென்னை: தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் எவை எவை என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று 13,070 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 95,048 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன் கீழ் வரும் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறி கடைகள், இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படுகிற மளிகை உள்பட பல சரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
அனைத்து உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
அனைத்து மின் வணிக சேவைகள் (இ காமர்ஸ்) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும் தினமும் நடைபெறும் பூஜைகள் அல்லது பிரார்த்தனைகள் அல்லது சடங்குகளை வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு அல்லது திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு அல்லது திருவிழா நடத்த அனுமதி இல்லை.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் (IT & ITES companies) குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே (Work From Home) கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.
கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் அல்லது குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
புதுச்சேரி தவிர்த்து ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த (e registration) விவரத்தை தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு விமானம் அல்லது கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e registration) விவரத்தை தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
ஏற்கெனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
பொது
- தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா பொது முடக்க கால செயல்பாடுகள் தொடர்பாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணைகள் எண் 346, நாள் ஏப்ரல் 18 மற்றும் எண் 348, நாள் ஏப்ரல் 20 ஆகியவற்றின்படி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வித மாறுதலும் இன்றி தொடர்கின்றன.
- பணிக்கு செல்லும் பணியாளர்கள், பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications