ஒரே ஒரு மேட்டர்.. “அதுவும் தவிடு பொடி தான்” - கிடைத்த பாசிட்டிவ் சிக்னல்.. எடப்பாடி டீம் உற்சாகம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு ஈபிஎஸ் தரப்புக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதில் அவருக்கு பாசிட்டிவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தால், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக இந்த வழக்கு திரும்பியிருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வந்தாலும், அது உண்மை இல்லை, விசாரணையின்போதே ஓபிஎஸ் தரப்புக்கு பலத்த அடி விழும் எனக் கூறி வருகிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ஈபிஎஸ் தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கட்சி இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று கூறி ஈபிஎஸ் தரப்பை கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ஓபிஎஸ்.

நீதிபதிகள் மறுப்பு
பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழுவை நடத்த தடை இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது உயர் நீதிமன்றம். அப்போது, உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது என தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழுவை நடத்தலாமா, கூடாதா என கடந்த ஜூலை 6-ஆம் தேதி உச்சநீதிமன்ற அமர்வில் நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, உட்கட்சி முடிவில் தலையிட முடியாது என்றும் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றே கூறியுள்ளோம், ஆனால் எங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிடைத்த வலுவான வாதம்
தங்கள் உத்தரவை தவறாகப் புரிந்துகொண்டு ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியிருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்துள்ள வலுவான வாதமாகப் பார்க்கப்படுகிறது. கட்சி கிட்டத்தட்ட கைவிட்டுப் போகும் சூழலில் இருந்தபோது, இந்த விஷயத்தால் உற்சாகமாக எழுந்து அமர்ந்தார் ஓபிஎஸ். தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதால், சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்.

மொத்தமாக திரும்பி விடும்
பொதுக்குழுவை நடத்தலாம் என ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு தவறான புரிதலால் வழங்கப்பட்டது என்றால், அதன் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழுவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என எதுவுமே செல்லாததாகி விடும் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை எடுத்து வைக்க தயாராகி வருகிறது. இந்த வழக்கில் மட்டும் தங்கள் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், ஈபிஎஸ் தரப்பின் அத்தனை நடவடிக்கைகளும் செல்லாததாகி விடும், கட்சி மீண்டும் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்பதால் அதற்கேற்ற வகையில் வலுவான வாதங்களை எடுத்து வைக்கத் தயாராகி வருகின்றனர்.

ஈபிஎஸ் தொடர் ஆலோசனை
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவாளர்களுடனும், முக்கியமான சட்ட வல்லுநர்களுடனும் இந்த பொதுக்குழு வழக்கு தொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம், நமக்கு ஏதும் பாதகத்தை ஏற்படுத்துமா என்று திரும்பத் திரும்ப விசாரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ் தரப்பின் சட்ட வல்லுநர்கள், பொதுக்குழு வழக்கு மீண்டும் நமக்குச் சாதகமாகத்தான் வரும் என ஈபிஎஸ்ஸுக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்களாம்.

எல்லாமே நமக்கு சாதகம்
பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை, 15 நாட்களுக்கு முன்னதாக அழைப்பு விடுக்கவில்லை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டாத பொதுக்குழு செல்லாத எனும் வாதங்களையே ஓபிஎஸ் தரப்பு வைத்தது. நாம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டிய ஜூன் 23 பொதுக்குழுவில் அவைத்தலைவரை தேர்ந்தெடுத்து, அவர் மூலமாகவே அடுத்த சிறப்பு பொதுக்குழுவை அறிவிக்கச் செய்தோம், சிறப்பு பொதுக்குழு என்பதால், அழைப்புக் கடிதம் 15 நாட்களுக்கு முன்பு அனுப்ப வேண்டும் என்ற தேவையில்லை என ஈபிஎஸ்ஸூக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 நாள் கணக்கு
மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களில் பெரும்பான்மையானோர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் குறித்த நேரத்தில் செய்யப்பட்டதால், இந்த 15 நாள் கணக்கை நீதிமன்றம் பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அதன் அடிப்படையிலேயே அப்போது ஓபிஎஸ்ஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, அதனால் இந்த உத்தரவில் எந்த மாற்றமும் இருக்காது என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளனர்.

ஒரு விஷயம் மட்டும்தான்
இப்போது ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், உச்சநீதிமன்றம் தங்களது உத்தரவை தீர்ப்பில் சுட்டிக்காட்டியது தவறு எனத் தெரிவித்திருப்பதால் தான். இனி வரப்போகும் தீர்ப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவு இன்ஃபிளூயன்ஸ் செய்யப்படாமல் அதே தீர்ப்பு தான் வரப்போகிறது. பொதுக்குழுவுக்கோ, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கோ எந்தச் சிக்கலும் வராது என திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதையடுத்து, ஈபிஎஸ் தரப்பு, தங்களது சாதகமான தீர்ப்பை உறுதி செய்வதற்காக எடுத்தும் வைக்க வேண்டிய வாதங்கள் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications