மறக்குமா நெஞ்சம்? மதிப்பிழந்த நோட்டுக்கள்.. உயிரிழந்த இந்தியர்கள்! மோடி அறிவிப்பால் யாருக்கு பயன்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் நிலையில் அந்த அறிவிப்பு வெளியான தினத்தில் அரங்கேறிய சம்பவங்கள், அதனால் மாறிய மக்களின் நிலை, இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து விரிவாக அலசுவோம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்கள் முன் பேசத் தொடங்கினார். ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல் மட்டுமே பிரேக்கிங் செய்தியாக தமிழ்நாட்டில் ஒலித்துக்கொண்டிருந்த காலம் அது.
அன்று தெரியாது, மோடியின் அந்த பேச்சு அடுத்த சில மாதங்கள் பிரேக்கிங் செய்தியாகவும், தங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும், நாட்டின் எதிர்காலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும். இந்தியர்கள் யாராலும் அந்த தருணத்தை எளிதில் மறந்துவிட முடியாது.
டைம் டிராவலா?.. 2023ல் புறப்பட்டு 2022ல் தரையிறங்கிய விமானம்.. அலறிய பயணிகள்.. கடைசியில் ட்விஸ்ட்
மக்கள் பேரதிர்ச்சி
அன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஆம்னி பேருந்தில் ஏறி அமர்ந்து பேருந்து நடத்துனரிடம் பணத்தை நீட்டியவர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. தினக்கூலி வேலைக்கு சென்றுவிட்டு சம்பளம் பெற்றுவிட்டு வீட்டு தேவைக்காக கடையில் பொருட்களை வாங்க 500 ரூபாயை கடைக்காரிடம் எடுத்து கொடுத்தவருக்கும் அதே அதிர்ச்சி காத்திருந்தது
மோசமான நாள்
தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்கு கூட்டி செல்ல டாக்சியை தொடர்புகொண்ட மகனுக்கும் இதே அதிர்ச்சி. அந்த நாள் மாலை ஏடிஎம்-இல் சம்பளத்தை எடுத்து வந்து வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்தவருக்கும் அதே அதிர்ச்சி. வட்டிக்கு பணம் வாங்கி வந்து மகளின் திருமணத்துக்காக மண்டபத்தில் அட்வான்ஸ் கொடுக்க சென்ற ஏழை தாய்க்கும் அதிர்ச்சி.
செல்லாத பணம்
இப்படி மக்கள் அதிர்ச்சியடைய காரணம் பணத்தை பெறும் இடத்தில் இருந்த வீட்டு உரிமையாளர், கடை உரிமையாளர், நடத்துனர்களிடம் இருந்து அந்த வாக்கியம். "டிவி பாக்கலையா? 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாம போச்சே உங்களுக்கு தெரியாதா?" என ஒரே தகவலை சொன்னார்கள். ஆனால், அதே 500 ரூபாயை வைத்தே தன் வீட்டில் துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பை அந்த கூலித் தொழிலாளியால் மீண்டும் கொடுக்க முடியும் என்பது டிவி பார்க்க சொன்னவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஏடிஎமில் மக்கள் கூட்டம்
பயணத்தை ரத்து செய்துவிட்டு, திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுக்காமல், மளிகை பொருட்கள் வாங்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தவர்கள் கண்ட காட்சி இன்று வரை ஒவ்வொரு இந்தியராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. செல்லும் வழியெல்லாம் ஏடிஎம் மையங்கள் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பிரதமர் மோடியின் பேச்சு
என்னதான் ஆச்சு என்று அவர்கள் விசாரித்தபோதுதான் தெரிந்தது, பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என்று. பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பிரபலங்கள், தொழிலதிபர்கள் ட்விட்டரில் பதிவுகளை வெளியிடவே, ஏழை, நடுத்தர மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் வெற்று காகிதமானதே என்று கண்ணீர் வடித்துகொண்டு இருந்தார்கள்.
மக்கள் குமுறல்
மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த பணம், திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணம், வீடு கட்ட வாங்கிய கடன், ஏடிஎம் இல் எடுத்த சம்பள பணம் என அனைத்தும் செல்லாமல் போய்விட்டதே என்று பொதுமக்கள் குமுறினார்கள். பல வீடுகளில் அழுகையும், ஒப்பாறி சத்தங்களும் ஒலித்தன.
ஏடிஎம்-இல் வரிசை
கணக்கில் இருக்கும் நமது பணத்தை வங்கியில் எடுப்பதற்கே கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து புறப்பட்டு தினசரி ஏடிஎம் மையங்களுக்கு சென்று வரிசையில் நின்று ரூ.2,000 பணம் எடுத்துவிட்டு பணிக்கு செல்வது மக்களின் தினசரி பணியாக மாறியது. ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாத காரணத்தால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்
உள்ளே வங்கி ஊழியர்கள் சாப்பிடவுடம், கழிவரை செல்லவும் கூட நேரமின்றி பணியாற்றி வந்தனர். பண மதிப்பிழப்பு அதிர்ச்சியால் மாரடைப்பிலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஏடிஎம், வங்கி வாசல்களில் நின்றும் உயிரை இழந்தவர் எண்ணிக்கை 100 ஐ தாண்டும். ஏடிஎம் வாசலில் நின்றவர் மரணம் என்ற செய்தி ஊடகங்களில் தொடர்ந்து வந்தது.
கட்டுக்கட்டாக பணம்
2,000 ரூபாய் நோட்டுக்காக கால் கடுக்க மக்கள் வங்கிகள், ஏடிஎம்களில் காத்துக்கிடந்து உயிர்விட, மறுபக்கம் பல முக்கிய புள்ளிகள், பணக்காரர்கள் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. எரியும் வீட்டில் எடுத்தது எல்லாம் லாபம் என 10% - 30% வரை கமிஷன் வைத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுக்கும் கும்பல் கிளம்பியது.
முடங்கிய தொழில்கள்
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் வரும் வசனத்தை சிலாகித்து பாராட்டிய மக்கள் பலர், அது நிஜத்தில் நடந்தால் எவ்வளவு பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்ந்தனர். நாட்கள் கடந்தன. பண மதிப்பிழப்பால் மக்களின் வாங்கும் திறன் குறையத் தொடங்கியது. ஏராளமான சிறு, குறு தொழில்கள் முடங்கின. பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மீண்ட பணம்
பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை சிவாஜி படத்தின் வில்லனைபோல் கட்டுக்கட்டாக வீடுகள், அலுவலகங்களில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று நினைத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியோ 99% பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. ரூ.15.41 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு வந்த நிலையில் அதில் ரூ.15.31 லட்சம் கோடி பணம் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
தொடரும் பிரச்சனை
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு வழங்கிய அவகாசம் முடிந்த பின்னர் பல வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டு மாற்றப்படாமல் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக கிடைத்தன. எப்படியாவது இதை மாற்றித்தாருங்கள் என வங்கிகளுக்கு ஏறி இறங்கினர் ஏழைகள். எதுவும் நடக்கவில்லை. கள்ளநோட்டுக்கள் பறிமுதல், கருப்பு பண பதுக்கல் சம்பவங்கள் அதன் பிறகும் அதிகரிக்க செய்துள்ளன.
ஓயாத பொருளாதார பிரச்சனை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடக்கத்தில் ட்விட்டரில் பாராட்டிய பிரபலங்களே பின்னர் அதை வாபஸ் பெற்று மத்திய அரசை விமர்சிக்க தொடங்கினார்கள். வருத்தத்தையும் பதிவு செய்தார்கள். தொலைக்காட்சிகளில் அன்று ஓடத் தொடங்கிய பிரேக்கிங் செய்திகள் பணவீக்கம், வேலையிழப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி, விலையேற்றம் என்ற பெயரில் இன்றும் தொடர்கின்றன.
யாருக்கு லாபம்?
சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அரசு நிறுவனங்கள் தனியாரிடம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால், மக்கள் வேலையிழnது நிற்கிறார்கள். வயிற்றுப் பசிக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதே நேரம் அம்பானி அதானி போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் உச்சம் தொடத் தொடங்கி இருக்கிறார்கள். புதிய புதிய தொழில்நிறுவனங்களை உருவாக்கி வருகிறார்கள்.