10+10.. யாரும் வர முடியாது.. ‘பளீச்’ கணக்கு போட்ட எடப்பாடி.. குறுக்கே ஓபிஎஸ் - ‘கவுன்ட்டர்’ அட்டாக்!
சென்னை : தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட 'கவுன்ட்டர் அட்டாக்'கிற்கு ஓபிஎஸ்ஸும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்காக, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், பொதுச் செயலாளர் பதவி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தயாராகி வருகிறாராம்.
ஏகமனதாக ஈபிஎஸ்ஸை தேர்ந்தெடுக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வரும் நிலையில், இந்த தேர்தல் நடத்த தடை பெறுவது தொடர்பாகவும், ஓ.பன்னீர்செல்வம் மூத்த வழக்கறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறாராம்.

அடுத்தகட்ட நகர்வு
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல இருக்கிறார் ஓபிஎஸ். இந்நிலையில், ஈபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார் என்கிறார்கள். ஓபிஎஸ் தரப்புக்கு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவது பற்றி ஈபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.

நிரந்தர பொதுச் செயலாளர்
ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருப்பதால், விரைவில் அந்தத் தேர்தலை நடத்தி, இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகுதிகள்
அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் ஆகிய விதிமுறைகள் கடந்த பொதுக்குழுவில் வெளியிடப்பட்டன.

10 + 10 ஏகமனதாக
10 மா.செக்கள் வழிமொழியவும், முன்மொழியவும் வேண்டும் என்பதால், வேறு எவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முடியாத சூழலே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் பார்த்தால், எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய ஈபிஎஸ் டீம் முடிவெடுத்துள்ளதாகவே தெரிகிறது. இதனால், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்புகளை விரைவில் ஈபிஎஸ் தரப்பு வெளியிடக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் என்ன செய்வார்?
இன்றைய தேதியில், ஓபிஎஸ்ஸிடம் பிடி இல்லாததால், அவர் உச்ச நீதிமன்றத்தையே நம்பி இருக்கிறார். இதற்கிடையே, ஈபிஎஸ் தரப்பு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த திட்டமிட்டால், அதற்கு எதிராகவும் வழக்கு தொடுக்கும் வகையில் ஓபிஎஸ் தயார் நிலையில் இருக்கிறாராம். ஈபிஎஸ் தரப்பு தேர்தலை நடத்திவிட்டால், அவர்களது தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்னும் வலுவடையக்கூடும்.

தொண்டர்கள் பாவம்
எனவே, ஈபிஎஸ் தரப்பின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், நீதிமன்றப் படியேறுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் பலருடனும் ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருகிறதாம். ஏற்கனவே பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஈபிஎஸ்ஸின் அடுத்தகட்ட முயற்சிகளும், அதற்கு ஓபிஎஸ் தொடரவிருக்கும் வழக்கும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் மேலும் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications