ஆளுனரின் அந்த ட்ரிப்.. ஒன்று திரண்ட ஆதீனங்கள்.. அமித் ஷாவிற்கு போன மெசேஜ்! திமுகவிற்கு பெரிய தலைவலி!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் கொண்டு செல்வது தொடர்பான விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பூதாகரம் ஆகியுள்ளது. தேசிய அளவில் இதை கொண்டு செல்ல சில ஆதீனங்கள் முயன்று வருவதாக அரசியல் தரப்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல வேண்டும் என்று வைக்கப்பட்டு வரும் கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார்.
இவரை பல்லக்கில் கோவிலுக்கு தூக்கி செல்வது பட்டினப் பிரவேசம் என்று அழைக்கப்படும். நான்கு அல்லது அதற்கும் மேற்பட்டோர் சேர்ந்து பல்லக்கில் ஆதீனத்தை தூக்கி சுமந்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள்.

விசிக திக vs பாஜக
இந்த விவகாரத்தில் விசிக, திக, பெரியார். திக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பட்டினப் பிரவேசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மனிதரை இன்னொரு மனிதர் தூக்குவது சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி கடுமையான புகார்களை விசிக, திகவினர் அடுக்கி வருகிறார்கள். அதோடு இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது பட்டினப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாஜக உள்ளிட்டு வலதுசாரி கட்சிகள், அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசு
இதில் தடை உத்தரவை போட்டது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை வாபஸ் வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தருமபுர ஆதீன விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார். அதற்குள் சிலர் ஆதீனத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். விரைவில் சுமுகமான முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு நேற்று அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டசபையில் பேசினார்.

மதுரை ஆதீனம்
இந்த விவகாரத்தில் இன்னொரு ஆதீனங்கள் பலரும் ஒன்றாக கைகோர்த்து உள்ளனர். தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்வதில் என்ன தவறு. உயிரைக் கொடுத்தாவது பட்டினப் பிரவேசம் நடத்துவோம். இதை யாராலும் தடுக்க முடியாது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது. முதல்வரே இந்த நிகழ்ச்சியை நேரில் நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் தெரிவித்துள்ளார்.

ஆளுனர் ட்ரிப்
அதோடு ஆளுநர் ரவி மயிலாடுதுறைக்கு பயணம் மேற்கொண்டதும். அவர் தருமபுரம் ஆதீனத்தை பார்த்ததாலும் அரசு கோபத்தில் இருப்பதாகவும். இதனால்தான் இந்த நிகழ்விற்கு தடை என்று மதுரை ஆதீனம் புகார் வைத்துள்ளார். என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள். இதை பற்றி பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் கடிதம் எழுத போகிறேன். பிரதமரை சந்திக்க போகிறேன். ஒரு மதத்தை மற்றும் ஒடுக்குவதற்கு பெயர் மதசார்பாற்ற தன்மை கிடையாது, என்று மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா மோடிக்கு மெசேஜ்
ஏற்கனவே தமிழ்நாட்டில் இது தொடர்பாக நடக்கும் நிகழ்வுகள் பற்றி டெல்லிக்கு தகவல் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மற்ற ஆதீனங்களும் இந்த விவாகரத்தில் தலையை நீட்டி உள்ளனர். தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார். இன்னொரு பக்கம் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

எப்படியாவது நடத்த வேண்டும்?
அதன்படி, பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும்.. எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கு எச்சரிவுக்காய் விடுகிறேன்.. கடுமையான எச்சரிக்கை விடுகிறேன். ஆதீனங்கள் எல்லாம் சேர்ந்து எப்படியாவது இந்த பிரவேசத்தை நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்றே தோன்றுகிறது.

திமுக தலைவலி
ஆளும் திமுக தரப்பிற்கு இந்த விவகாரம் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இப்போது பிரவேசத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தால் இந்து அமைப்புகள் இடையே அது எதிர்மறையாக திரும்பும். பிரவேசத்திற்கு அனுமதி அளித்தால் அது ஆளும் திமுக பின்வாங்கியது போல மாறிவிடும். இதனால் இந்த சிக்கலான விஷயத்தை ஆளும் திமுக தரப்பு எப்படி கையாள போகிறது என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications