படையப்பா போல் சிவாஜி வீட்டில் பிரச்னை -இப்டி பண்ணிட்டாங்களே! பிரபு, ராம் மீது சகோதரிகள் புகார் என்ன?
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களை போலி உயில் மூலம் அவரது மகன்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் அபகரித்துவிட்டதாக அவர்களின் சகோதரிகள் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய மகள்களும் உள்ளனர்.
தமிழ் சினிமாக்களில் முன்னணி நடிகராக பிரபுவும், ராம்குமார் அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாஜகவிலும் ராம்குமார் உறுப்பினராக இருந்து வருகிறார்.

சிவாஜியின் சொத்துக்கள்
சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் சிவாஜிக்கு மட்டும் ரூ.270 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 21 ஆண்டுகளாக சிவாஜியின் குடும்பம் ஒற்றுமையான குடும்பமாகவே திரையுலகில் பார்க்கப்பட்டு வந்தது. சிவாஜியின் சொத்துக்களை அவரது வாரிசுகள் 4 பேரும் அனுபவித்து வந்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில்தான் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவர்களின் சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். அதில், தங்கள் சகோதரர்கள் தங்களுக்கே தெரியாமல் சொத்துக்களை விற்றதுடன் தங்கள் மகன்களின் பெயர்களில் சொத்துக்களை மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

போலி உயில்
தந்தை சிவாஜி கணேசன் சேர்த்து வைத்த ரூ.10 கோடி மதிப்பிலான 1,000 சவரனுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்களை தங்களிடம் வழங்காமல் சகோதரர்கள் ஏமாற்றியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் வீட்டை இருவரும் விற்றுவிட்டதாகவும், ராயப்பேட்டை வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தை தங்களுக்கு வழங்குவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிவாஜி கணேசன் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைக்காத நிலையில், போலியாக உயில் தயாரித்து ஏமாற்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர்.

இந்து வாரிசு உரிமை சட்டம்
தாய் வழி மூலம் கிடைக்க வேண்டிய சொத்துக்களிலும் தங்களுக்கு பங்களிக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தின் அடிப்படையில் சிவாஜி கணேசனின் சொத்தில் மகள்களான தங்களுக்கு உரிமை உள்ளது என்பதால் நீதிமன்றம் பாகப்பிரிவினையை முறையாக செய்துத் தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications