செம "மாஸ்டர்" பிளான்.. காத்திருந்த வாய்களுக்கு அல்வா.. பக்காவாக ட்யூன் ஆகிறார் விஜய்.. இதுதான் சரி!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது
சென்னை: மாஸ்டர் பட விழாவில் விஜய் ஏன் அரசியல் பேசவில்லை... ஏன் மவுனம் காத்தார்... மத்திய, மாநில அரசுகளுக்கு பயந்துவிட்டாரா.. தன்நிலைப்பாட்டில் பின்வாங்கி விட்டாரா.. என்ற பல கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.. ஆனால் இப்போதுதான் விஜய் கரெக்டாக செயல்பட்டுள்ளார். அவரது அமைதி உண்மையிலேயே புத்திசாலித்தனமானது.
Recommended Video
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி விஜய் வீட்டில் ரெய்டை நடத்தி பாஜக தரப்பு அதிருப்தியை சம்பாதித்து கொண்டது.. இந்த ரெய்டினால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அபரிமிதமான பரிவு கூடியது.
மறுபக்கம் விஜய் ரசிகர்களோ ஏகப்பட்ட கொந்தளிப்பை அடைந்தனர். ஆனாலும் அமைதி காத்தனர். எங்க மாஸ்டர் வரட்டும்.. நிச்சயம் உங்களுக்கு எல்லாம் பதிலடி தருவார் என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தி கொண்டனர்.. அதன்படியே மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்தது.
எதிர்பார்ப்பு
இதில் விஜய்யின் பேச்சுதான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. படத்தை பற்றி புகழ்ந்து பேசியவர், கடைசியாக விஷயத்துக்கு வந்துவிடுவார் என்ற ஆர்வம் எகிறி கொண்டே இருந்தது.. அதன்படியே குட்டிக்கதை என்றதும் கைதட்டல் அரங்கத்தை பிளந்தது.. ஆனால் 2 விஷயங்களை மட்டும் விஜய் சொன்னார்.. நம்மேல் யார் கல்லெறிந்தாலும் சிரிப்பாலேயே அதை எதிர்கொள்ள வேண்டும், உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருக்கணும் என்றார்.
ரெயிடு
விஜய் என்ன இப்படி பேசிட்டாரே... எதை எதையோ எதிர்பார்த்தோமே.. ரெய்டு என்ற பெயரில் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள், ஆனால் எந்த பதிலடியும் தரவில்லையே.. என்ன நிலைப்பாட்டில்தான் உள்ளார்.. என்ற பெருத்த ஏமாற்றம், சந்தேகம், குழப்பம், கோபம், எல்லாவித உணர்வுகளுடன் ரசிகர்கள் தவித்தனர்.. இந்த சமயத்தில்தான் விஜய் பேச்சினை வைத்து ஒருசில அரசியல் கட்சிகள், ரெய்டு நடந்ததை பார்த்தே விஜய் பயந்துவிட்டார்.. எதற்கு பொல்லாப்பு என ஒதுங்குகிறார்.. இனி அரசியலுக்குள் நுழைவது கஷ்டம்தான்.. அந்த எண்ணம் இருந்திருந்தால் நிச்சயம் எதையாவது பேசியிருந்திருப்பாரே என்ற முணுமுணுப்புகள் எழ தொடங்கி விட்டன.
நிதர்சனம்
ஆனால், உண்மை என்ன.. நிதர்சனம் என்ன...??
விஜய் பொறுமை காக்கிறார்... எதையும் அவசரப்பட்டு பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.. புத்திசாலித்தனமாக பேசியுள்ளார்.. ரெய்டு விஷயத்தை பற்றி பேசி, அதை வைத்து அரசியல் பேச்சு என்பது நிச்சயம் சுயநலத்தை பிரதிபலிக்கும்.. எப்படி பார்த்தாலும் அந்த ரெய்டு, அதிகாரிகளின் வழக்கமான செயல் நடவடிக்கை என்றுதான் எடுத்து கொள்ளப்படும்.. அதனால் தன் வீட்டில் நடந்த ரெய்டு வைத்து அரசியல் பேசுவது முதிர்ச்சியாகாது என்பதை விஜய் நன்றாகவே உணர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல், அவரே எதிர்பாராத அளவுக்கு ஆதரவுகளும் கிடைத்துவிட்டன. அதனால்தான் அரசுகளை விஜய் விமர்சனம் செய்யவில்லை என்கிறார்கள்.
நிகழ்வுகள்
அடுத்ததாக, அரசியல் நிகழ்வுகளை அவர் உன்னிப்பாகவே கவனித்து வருகிறார்.. தன் வருகைக்கு முன்பேயே ரஜினியும், கமலும் என 2 பேரும் மலைகளாக உயர்ந்து நிற்பதையும், அவர்கள் மீதான கருத்துக்கள், விமர்சனங்கள் எந்த மாதிரியாக வைக்கப்படுகின்றன, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் கவனித்து வருகிறார்.. அதை விட முக்கியமாக ரஜினிக்கு அடுத்தடுத்து கிடைத்து வரும் கெட்ட பெயரும் கூட அவரை யோசிக்க வைத்திருக்கிறது..
மன்றம்
அதற்காக அரசியல் ஆசையே விஜய்க்கு இல்லை என்று முழுவதுமாக சொல்லிவிட முடியாது.. அரசியலுக்கு வரலாமா? வந்தால் தனித்து இறங்கி களம் காணலாமா? அல்லது வெளியில் இருந்து ஆதரவு தரலாமா என்கிற கேள்விகளை எல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் விஜய் கலந்தாலோசித்துதான் வருகிறாராம்.. அதில் மக்கள் மன்றத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தனித்துதான் நாம் நிற்க வேண்டும் என்றே பதில் சொல்லி இருந்தனர்.
தனித்து களம்
இதை கேட்ட விஜய், தனித்து நிற்பது சரியாக இருக்குமா? விஜயகாந்த் இப்படித்தானே வந்தார், அவரால் ஏன் வெற்றியை அடைய முடியவில்லை என்றும் தன் சார்பான கேள்வியை எழுப்பினாராம்.. அதற்கு நிர்வாகிகள், விஜயகாந்த் தனித்து நின்றபோதுதான் அவருக்கு செல்வாக்கு கிடைத்தது, பிறகு கூட்டணியில் சேர்ந்தபிறகுதான் அவை சரிந்தன, அதனால் நாம் தனித்து நிற்பதுதான் நமக்கு கெத்து.. அப்போதுதான் பிற கட்சிகளிடம் தனித்து நிற்க முடியும், ஆதரவும் பெருகும் என்று பதிலளித்தனராம். இவை அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டாரே தவிர விஜய் ஒருமுடிவையும் எடுக்கவில்லை என்பதே உண்மை!
ரசிகர்கள்
எனினும் நகர்ப்புறம் சார்ந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் இறங்கி சுயபரிசோதனை செய்து கொள்ளலாம், அதன் வெற்றியை ஒரு முன்னோட்டமாக வைத்து அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லலாம் என்ற யோசனையும் தற்போதைக்கு உள்ளதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே இப்படித்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலையே விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவங்க கிட்டத்தட்ட 150 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.. இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.. சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த வெற்றியை சுவைத்தாலும் யாரும் விஜய்யின் படத்தை பயன்படுத்தாமலேயே இவங்க அத்தனை பேரும் வெற்றியை பெற்றிருந்தனர்.. இதுதான் விஜய்யின் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது.
அமைதி
இப்போது நகர்ப்புறம் சார்ந்த உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நிச்சயம் களமிறங்குவார்கள் என்றே தெரிகிறது! அதனால் அரசியல் ரீதியான கருத்தை வாய் திறந்து விஜய் இதுவரை சொல்லவில்லையே தவிர, தற்சமயம் அடக்கி வாசிக்கிறார் என்பதே உண்மை.. யாருக்காகவும் பயந்தோ, ஒதுங்கியோ ஓடிவிடவில்லை.. "உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருக்கணும்" என்று விஜய் பேசியதன் அர்த்தமும்கூட இதுதானோ!