"கரெக்ட்டா வந்துட்டீங்க".. பூரித்த ஸ்டாலின்.. ஆட்டத்தை கலைத்து ஆடும் ஆறுக்குட்டி.. அடுத்து "அவராமே"
ஆறுக்குட்டி கொங்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்க போகிறாராம்
சென்னை: கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், அவருக்காக அடுத்த அசைன்மென்ட் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆறுக்குட்டி ஒரு இடத்தில் இருக்கிறார் என்றாலே, அந்த இடமே குஷியாகவே காணப்படும்.. கவுண்டம்பாளையம் அதிமுகவாக அறியப்பட்டதைவிட, இவரது பாட்டும், டான்சும்தான், தொகுதி மக்களிடம் அதிகமாக நெருங்க வைத்தன..
இவர் எப்போதுமே பாட்டு பாடுவார், சில சமயம் டான்ஸ் ஆடுவார்.. இப்படித்தான் ஒருமுறை சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ் மாதங்களை வரிசைப்படுத்தி, அதிமுக அரசு செய்த சாதனைகளை கிராமிய பாடல்களாக பாட ஆரம்பித்துவிட்டார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: அனைத்து தரப்பும் வாதங்களும் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல்!
டென்ஷன்
இதோ இதோ முடித்துவிடுவார் என்று சபையில் பார்த்தார்கள். ஆனால் ஆறுக்குட்டி ரொம்ப நேரத்துக்கு பாடிக் கொண்டே இருந்ததால், திமுக உறுப்பினர்களே கடுப்பாகி விட்டார்கள்.. சொல்வது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை, அதை பாட்டு பாடி ராகத்துடன் வேறு காட்ட வேண்டுமா என்று டென்ஷனாகிவிட்டார்கள். கடைசியில் எழுந்து நின்று எதிர்ப்பே தெரிவித்து, தயவுசெய்து கோரிக்கையை மட்டும் சொல்ல சொல்லுங்க, பாட வேண்டாம் என்று சபாநாயகரிடம் சொல்லி, அதற்கு பிறகுதான் பாடுவதையே நிறுத்தினார் ஆறுக்குட்டி..
ஓஹோ.. பாடல்
இன்னொரு சம்பவத்தையும் உதாரணமாக சொல்லலாம்.. ஒருமுறை இவரது தொகுதியில், அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.. பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் எல்லோரும் சேர்ந்து அப்போதைய அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பாடினார்கள்.. சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆறுக்குட்டி, இதை கவனித்தார்.. பிறகு மாணவிகள் முன்னிலையில் பேச வந்தார். அப்போது, "பாட்டெல்லாம் நல்லா தான் பாடினீங்க..
ஃபைனல் பஞ்ச்
ஆனால் நலத்திட்டங்கள் ரொம்ப குறைவாக இருந்ததே.. என்கிட்ட கேட்டிருந்தால் நிறைய எழுதி தந்திருப்பேனே" என்றார்.. அதோடு ஆறுக்குட்டி விடவில்லை, மாணவிகள் என்னென்ன திட்டங்களை லிஸ்ட்டில் விட்டுவிட்டார்களோ, அதையெல்லாம் பாட ஆரம்பித்தார்.. அப்போதும் ஆறுக்குட்டி விடவில்லை.. யாராவது நாட்டுப்புற பாட்டு கத்துக்க ஆசைப்பட்டால், நான் சொல்லி கொடுக்கிறேன், என்று ஃபைனல் பஞ்ச் வைத்தார்.. அதற்கு பிறகுதான் அந்த விழாவே தொடங்கியது.
அறுவடை
இதெல்லாம் எதற்காகவென்றால், 10 வருடமாக தொகுதி மக்களிடம் ஆறுக்குட்டி பெற்ற செல்வாக்குகள் ஏராளம்.. இந்த செல்வாக்கை அதிமுக சரியாக அறுவடை செய்து கொள்ளவில்லை என்கிறார்கள்.. அதிமுக அணிகள் பிளவுபட்ட போது ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த முதல் எம்எல்ஏ ஆறுக்குட்டிதான்.. அதற்கு பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடிக்கு அணிக்கு தாவி, அங்கு சீட்டு தராததால், அப்செட்டில் இருந்தார்.. நடுநடுவே எடப்பாடி, ஓபிஎஸ்ஸையும் தாக்கி பேசி வந்தார்.
கரை ஒதுங்கினார்
இப்போது திமுக கனகச்சிதமாக பிளானை போட்டுள்ளது.. திமுகவின் கொடநாடு வலையில், தானாகவே போய் சிக்கினார் ஆறுக்குட்டி.. நிறைய முறை விசாரணைகள் இவரிடம் நடந்தன.. கொடநாடு வழக்கில் ஆறுக்குட்டியின் வாக்குமூலங்கள் முக்கிய ஆதாரமாக இன்றுவரை விளங்கி கொண்டிருக்கின்றன. அப்போதுகூட, எடப்பாடி இவரை தன்பக்கம் இழுக்க தவறிவிட்டதாகவும், கொங்குவை தன் பிடியில் வைத்திருந்தும் அவரை சரிக்கட்ட தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. ஒருபக்கம் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கவும், மறுபக்கம் தன்னுடைய எதிர்கால அரசியலுக்காகவும், திமுக பக்கம் கரை ஒதுங்கி உள்ளார் ஆறுக்குட்டி..
ஆறுக்குட்டி ஸ்கெட்ச்
கொங்குவுக்கு ஸ்கெட்ச் போட்டு வரும் திமுகவுக்கு, ஆறுக்குட்டியின் வருகை தெம்பை தந்துள்ளது.. எவ்வளவு நிர்வாகிகள் முடியுமோ, அவ்வளவு பேரையும் திமுக பக்கம் கொண்டு வரும் அசைமென்ட் ஆறுக்குட்டியிடம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இப்போதே வேலையை ஆரம்பித்துள்ள ஆறுக்குட்டி, சில புள்ளிகளை இப்போதே திமுக பக்கம் கொண்டு செல்லும் மும்முரத்திலும் இறங்கி விட்டாராம்.. இது எடப்பாடி தரப்புக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தோப்பு வெங்கடாசலம் உட்பட கொங்குவில் பல புள்ளிகளை திமுக அரவணைத்து கொண்ட நிலையில், உட்கட்சி பிரச்சனையால், எடப்பாடி கொங்குவை தொடர்ந்து கட்டிக்காக்க தவறிவிட்டாரா? என்ற சந்தேகத்தையும் இது எழுப்பி உள்ளது.
ஆட்டம் ஆரம்பம்
ஆறுக்குட்டியை நம்பி அதிமுக இல்லை என்று எடப்பாடி சொன்னாலும், "இருக்க வேண்டிய இடத்துக்குதான் வந்திருக்கீங்க" என்று கட்சியில் இணைய வந்த ஆறுக்குட்டியிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன.. இதைத்தான், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று ஓபனாகவே சொல்லி உள்ளார்.. "ஆறுக்குட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது, தொடர்ந்து வெளிவரும்... அதிமுகவினர் தங்களது குட்டிகளை பாதுகாக்க முடியவில்லை" என்று பஞ்ச் வைத்துள்ளார். ஆறுக்குட்டியை பொறுத்தவரை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவானவர் என்றாலும், அவர் தற்போது திமுக பக்கம் சென்றுள்ளதும் ஒருவகையில் பிளஸ்தான் என்கிறார்கள்.. ஆக மொத்தம் ஆறுக்குட்டி தனது "ஆட்டத்தை" ஆரம்பித்துவிட்டார்..!