"ஜெய் பீம்.." தமிழ் சினிமா "வரலாற்றை" மாற்றும் டைட்டில்.. சூர்யா ஏன் கொண்டாடப்படுகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா தனது மறுமலர்ச்சி காலத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது... மலையாள சினிமா போல, படைப்பாளிகள் தங்கள் "கொள்கைகளை," அச்சமின்றியும், வெளிப்படையாகவும், வலுவாகவும், எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளனர்.

வழக்கமான கட்டுகளை தமிழ் சினிமா உடைக்க ஆரம்பித்துள்ளது. அதன் லேட்டஸ்ட் வரிசைதான் "ஜெய் பீம்"

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வரும் சூர்யாவின் 39வது படத்துக்கு "ஜெய் பீம்" என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த படத்திற்கான டைட்டில் வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமா வரலாறு

தமிழ் சினிமா வரலாறு

படத்தின் பெயரில் என்ன கட்டுடைப்பு இருக்கிறது என்கிறீர்களா.. இந்த பெயரே ஒரு கட்டுடைப்புதான். தமிழ் சினிமாவில், பெயர் அரசியல் வெகு பிரபலம். கபாலி என்ற பெயர் உள்ளவர் வில்லனுக்கு அடியாளாகத்தான் இருப்பார். மாரி என்ற பெயரும் அப்படித்தான் பயன்படுத்தப்பட்டது. "குப்பத்து பொறுக்கி பசங்க.." என்று முதல்வன் படத்தில் ஷங்கர் பயன்படுத்திய வார்த்தைகளும், தொடர்ந்து குப்பம் தொடர்பாக அவர் முன்னிலைப்படுத்தும் காட்சிகளும் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளானது.

பெயர் அரசியல்

பெயர் அரசியல்

பெயர்களையும், காட்சியமைப்பையும் வேறு கோணத்திற்கு மாற்றி, மக்கள் மனதில் படர்ந்துள்ள நினைவுகளை மாற்றி "டீகோட்" செய்ய வேண்டும் என்ற முன்னெடுப்பை எடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். ரஜினிகாந்த் நடித்த படத்தின் பெயர் கபாலி. "கபாலின்னா கையை கட்டிகிட்டு சொல்லுங்க எஜமான்னு நிக்குறவன்னு பார்த்தியா.. கபாஆஆலிடா" என்று ஹீரோ கர்ஜனை செய்வது போல அதில், காட்சி இருக்கும்.

கட்டுடைப்பு செய்த காலா திரைப்படம்

கட்டுடைப்பு செய்த காலா திரைப்படம்

ஆடையை அவிழ்த்ததற்காக கூனி குறுகி பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக காட்சிகள் அமைக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவில், ஆடைகளை அவிழ்த்த பிறகும், கட்டையை எடுத்து எதிராளியை விரட்டியடிப்பது போன்ற, பெண் கதாப்பாத்திரம், காலா திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். நிர்வாணம் என்பது அவமானம் அல்ல.. என்று ஒரு கட்டுடைப்பு அங்கே நிகழ்ந்திருக்கும்.

திராவிட அரசியல்

திராவிட அரசியல்

இதோ.. சில தினங்கள் முன்பு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கூட, திராவிட அரசியல் வெளிப்படையாக பேசப்பட்டிருக்கும். மலையாள திரைப்படங்களில், இடதுசாரிகள், காங்கிரஸ் அரசியல் வெளிப்படையாக பேசப்பட்டிருக்கும். "காம்ரேட் இன் அமெரிக்கா.." படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.. எவ்வளவு வெளிப்படையாக ஹீரோ ஒரு காம்ரேட் என்பது காட்டப்பட்டிருக்கும். அவ்வப்போது லெனின் கற்பனையில் அவரது பக்கத்தில் பேசிவிட்டுச் செல்வதை போல காட்சி இருக்கும். சஹாவு அப்படியான படம்தானே. படத்தின் பெயர்களில் கூட இவ்வளவு ஓபனாக இடதுசாரி சித்தாந்தம் இருக்கிறது. ஆனால் திராவிடம் 50 வருடங்களுக்கு மேலாக ஆளும் தமிழகத்தில் சார்பட்ட பரம்பரைதான் அதை ஒரு வாழ்வியல் கலாச்சாரமாக முன்னிறுத்தி படமாகியுள்ளது.

வெளிப்படையான வசனங்கள்

வெளிப்படையான வசனங்கள்

ஒரே குடும்பத்தில் ஒருவர் திமுக, ஒருவர் எம்ஜிஆர் ஆதரவாளர், சிலர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என படம் நெடுகில் வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதிய காலத்திற்கு பிறகு திராவிட அரசியல் பெரிதாக சினிமாவில் கையாளப்படவில்லை. ஆனால் "திமுககாரன் பயப்படமாட்டேன்" என்று பசுபதி வசனம் பேசுவதை தயக்கமேயில்லாமல் படத்தில் வைத்துள்ளார் பா.ரஞ்சித். இன்னொரு பக்கம் வெற்றிமாறனும் தனது திரைப்படங்களில் சாதிய மேட்டின்மைக்கு எதிராக பிரச்சார நெடி இல்லாமல் படங்களை எடுக்கிறார். அசுரன் ஒரு ஆகச்சிறந்த உதாரணம். அந்த வரிசையில் வந்தவர்தான் மாரி செல்வராஜ். தலித்தியமும், சமத்துவமும் பேசுகிறது அவரது படங்கள். இதெல்லாம் இதுவரை நினைத்து பார்க்க முடியாதவை. 1990களில் பெரும்பாலான படங்கள், இடைநிலை ஜாதியை முன்னிறுத்திதான் வெளியாகிக் கொண்டிருந்தன. பஞ்சாயத்து தலைவர் உத்தரவு போட்டால் எல்லோரும் கேட்கனும் என்பதாகத்தான் அவை இருந்தன.

ஜெய் பீம் வார்த்தைக்கு பின்னால் உள்ள வரலாறு

ஜெய் பீம் வார்த்தைக்கு பின்னால் உள்ள வரலாறு

இந்த கட்டுடைப்பின் முக்கிய அங்கம்தான், சூர்யாவின், ஜெய் பீம். இந்த வார்த்தைக்கு பின்னால் பெரும் வரலாறு உள்ளது.

1818ம் ஆண்டு, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப்.ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படையைச் சேர்ந்த 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்திய பேஷ்வா பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர். ஆனால், ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகமான மகர்கள் மிகவும் ஆக்ரோஷமாக போரிட்டு ஆதிக்க ஜாதிகள் அடங்கிய பேஷ்வா படையை தோற்கடித்தனர். பீமா நதியை கடந்தபோது, மகர் படைகள் "ஜெய் பீம்" என கோஷமிட்டதால் அந்த முழக்கம் அப்போது முதல் பிரபலமானது.

அம்பேத்கருடன் தொடர்புள்ள ஜெய் பீம் கோஷம்

அம்பேத்கருடன் தொடர்புள்ள ஜெய் பீம் கோஷம்

ஆங்கிலேய படைகளுடன் மகர் படைகள் இணைந்து போரிட்டதால் அந்த வெற்றியை கொண்டாடக் கூடாது என்பது வலதுசாரிகள் வாதம். ஆனால், அடக்குமுறைக்கு எதிராகத்தான் மகர் மக்கள், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து போரிட்டனர், இது அடக்குமுறைக்கு எதிரான எழுச்சி என்பது இடதுசாரிகளும், தலித்திய ஆதரவாளர்களும் முன் வைக்கும் வாதம். எனவேதான், சட்ட மேதை அம்பேத்கர், பீமா கோரேகான் பகுதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். 1936ம் ஆண்டு அம்பேத்கரின் பிறந்த நாளில் அவரைப் பார்த்து ஆதரவாளர் ஒருவர் ஜெய் பீம் என கோஷமிட்டார். இதன்பிறகு அந்த கோஷம் அம்பேத்கரோடு தொடர்புபடுத்தி இப்போது வரை பிரபலமாக இருந்து வருகிறது. அம்பேத்கரிசம் பேசும் அனைவரும் ஜெய் பீம் என்று சொல்வது வழக்கம்.

சூர்யாவின் துணிச்சல்

சூர்யாவின் துணிச்சல்

ஜெய் பீம் என்றால் அம்பேத்கரோடு சேர்ந்து பீமா கோரேகானும் சேர்ந்தே நினைவுக்கு வருவதால் வலதுசாரிகளுக்கு அந்த வார்த்தை அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஆனால் இதைத்தான் தனது படத்தின் பெயராக சூட்டியுள்ளார் சூர்யா. நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் வலதுசாரிகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருபவர் சூர்யா. இதனால் கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அவர் எதிர்கொள்கிறார். ஆனாலும் அச்சப்படாமல், எதற்கும் துணிந்தவன் என்ற தனது இன்னொரு திரைப்பட தலைப்புக்கு பொருத்தமாக, ஜெய் பீம் என்ற பெயரை சூட்டியுள்ளார் அவர். ஏற்கனவே கூறியபடி, பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் வரிசையில், சூர்யாவும் தமிழ் திரைப்படத்தில் கட்டுடைப்பை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில், ஜெய் பீம் என்ற இந்த டைட்டில், தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு கொண்டு செல்லக் கூடியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+