வன்னியர் இடஒதுக்கீடு... தென் தமிழகத்தில் அடங்காத கொந்தளிப்பு... பல்டி அடிக்க முயற்சிக்கும் அதிமுக
சென்னை: வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தால் தென் தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவுவதை தேர்தல் களம் வெளிப்படுத்தியிருப்பதால் இப்போது அதிமுக பின்வாங்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%; சீர்மரபினருக்கு 7.5%; எஞ்சிய ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியிட்டது முதலே சலசலப்புகள், கண்டனங்களுக்கு பஞ்சமில்லைதான்.

பாமக கூட்டணிக்காக..
சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய நெருக்கடியில் அக்கட்சி முன்வைத்த இடஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக ஏற்றது. இதன் மூலம் வன்னியர் வாக்குகளை அப்படியே அள்ளலாம் என்கிற தேர்தல் கணக்கால் இந்த அறிவிப்பை வெளியிட்டது அதிமுக.

கடும் எதிர்ப்பு
ஆனால் அப்போதே முக்குலத்தோர் தரப்பில் இருந்து மிக கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இப்போது சட்டசபை தேர்தல் களத்தில் தென் தமிழகத்தில் முக்குலத்தோரின் கடும் எதிர்ப்பு உக்கிரமாக மையம் கொண்டிருக்கிறது. இதனை உணர்ந்துதான் அமைச்சர் உதயகுமார் போன்றவர்கள் வன்னியர் இடஒதுக்கீடு ஒரு தற்காலிக ஏற்பாடு என கூறி வந்தனர்.

கை கொடுக்காத இடஒதுக்கீடு
மேலும் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகளும் வட தமிழகத்தில் வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு வந்து சேராது என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் இப்போது உஷாராக தென் தமிழகத்தில் முக்குலத்தோரை சமாதானம் செய்வதில் அதிமுக மும்முரமாகிவிட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டி எனவும் கூறப்படுகிறது.

அதிமுக பல்டி
அதுவும் ஒரு சில தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள் அப்படியே திமுக அணிக்கு போகக் கூடும் என்கிற கருத்து கணிப்புகள்தான் அதிமுகவை கலங்கடித்திருக்கிறதாம். இதனால் இப்போது டேமேஜ் கண்ட்ரோல் என்ற வகையில் எப்படியாவது சரி செய்துவிட முடியாதா என போராடுகிறது அதிமுக. இதன் அடுத்த கட்டமாக சசிகலாவுக்கே அதிமுக அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கும் இல்லை என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications