பாஜக தலைவர் தேர்தல ஏன் நடத்தல? கொளுத்திப் போட்ட நாராயணசாமி.. கிரண் பேடி பற்றி மீண்டும் பேச்சு
சென்னை: ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் கட்சியில் நடைபெறும் தேர்தலில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஜனநாயகத்தை பற்றி பேசும் பாஜகவில் இதுவரை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்க்கே, கேரள மாநிலத்தை சேர்ந்த சசிசதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலின் ஓட்டுப் பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
சிங்கப்பெண்! கத்தியுடன் வந்த கொள்ளையன்.. தனியாளாக விரட்டிய பெண் வங்கி மேலாளர்.. மாஸ் சம்பவம்!
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதுச்சேரி தேர்தல் அதிகாரி ஹைபி ஈடன் எம்பி, கோயம்புத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபி ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு
புதுச்சேர் மாநில காங்கிரஸ் தலைவர் அறை வாக்குப்பதிவு அறையாக அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ, சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், பாலன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்க்களித்தனர்.
நாராயணசாமி பேட்டி
மாலை 4 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்தது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிக்கு ஒரு கமிட்டி உறுப்பினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில், ஏனாம் தொகுதிக்கான உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படாததால் 29 பேர் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. வாக்களித்த பின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
காந்தி குடும்பம்
அப்போது அவர், "யார் தலைவராக வந்தாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனை படி செயல்படுவார்கள். காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தையும் பிரிக்க முடியாது. காந்தி குடும்பத்தினரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் புதிய தலைமை செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாஜக தேர்தல்
காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் நேரம் இது. அடிப்படை ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. ஆனால் பாஜகவில் நியமிக்கப்பட்ட தலைவர்கள்தான் உள்ளனர். உட்கட்சி ஜனநாயகம் பாஜகவில் இல்லை." எனக்கூறிய நாராயணசாமி பாஜக தலைவர்களின் பெயர்களை அப்போது பட்டியலிட்டார்.
கிரண் பேடி
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கழிவறை கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக புகார் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ஊழல் ஏதுமில்லை தாராளமாக விசாரணை நடத்தலாம். ஊழல் நடந்து இருந்தால் கண்ணில் விளக்கெண்ணை போட்டிருந்த கிரண்பேடி விட்டு இருப்பாரா? தற்போதைய ஆட்சியில் தான் மதுபான தொழிற்சாலை ஊழல் மிக பெரியளவில் நடந்துள்ளதாக பாஜக எம்எல்ஏவே கூறியிருக்கிறார்." என்றார்.