வேகவேகமாக ஏறி ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு இருந்த சிசிடிவி கேமராவை கழற்றிய நபர்.. பின்னணி என்ன?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு முன்பு சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இன்று திடீரென அகற்றப்பட்டது அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச் சாலை கடந்த ஒரு மாத காலமாக பரபரப்போடு இருந்து வருகிறது.
மோதல் ஏற்படக்கூடும் என்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் திடீரென சிசிடிவி கேமரா ஒன்று ஊழியர்களால் அகற்றப்பட்டது.

அதிமுக மோதல்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், அதிமுக தலைமை அலுவலகமே ரத்தக்களறி ஆகும் அளவுக்கு வளர்ந்தது.
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் ஒரு வழியாக அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்திருந்தாலும் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகும் பெரும் பரபரப்புகள் தொடர்ந்தே வருகின்றன.

பதற்ற சூழல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல்கள் வருவதாகவும் அவருக்கான பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வீடுகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் முன்பு 15 போலீசார் பாதுகாப்பு பணிக்காக இருந்த நிலையில், பாதுகாப்பு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு தற்போது 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வருபவர்கள் பலத்த சோதனைகளுக்குப் பிறகே வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேமரா அகற்றம்
இந்நிலையில், பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு முன்பாக சாலையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் சிசிடிவி கேமராவை ஊழியர்கள் இன்று அகற்றினர். அதிமுகவில் நிலவி வரும் பதற்ற சூழலில் ஓபிஎஸ் வீட்டின் முன்பிருந்த சிசிடிவி கேமராவை திடீரென ஊழியர்கள் அகற்ற முயன்றது அங்கிருந்தவர்கள் பத்தியில் பேசுபொருளானது.

ஏன் அகற்றப்பட்டது?
ஓபிஎஸ் வீட்டின் முன்பு இருந்த அந்த சிசிடிவி கேமராவுக்கு மின்சார இணைப்பு திடீரென வராததால், நேற்று முதல் கேமரா செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதனை கழற்றி சர்வீஸ் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றும், சரி செய்த பிறகு மீண்டும் உடனடியாக பொருத்தப்படும் என ஓபிஎஸ் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications