சட்டென கருணாஸ் இப்படி சொல்லிட்டாரே.. கடைசிவரை சசிகலாவையும் மீட் பண்ணலையே.. இதுதான் காரணமா?
நடிகர் கருணாஸ் திடீரென அரசியலுக்கு முழுக்க போட காரணம் என்ன
சென்னை: தமிழக அரசியல்வாதியும், பிரபல நடிகருமான கருணாஸ், திடீரென இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பதே, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அன்று கூவத்தூர் சம்பவத்தில் அதிக அளவு பேசப்பட்டவர் கருணாஸ்.. சர்ச்சைகளை கொட்டியவர்.. சலசலப்பை ஏற்படுத்தியவர்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே கருதப்பட்டவர்.
ஜெயிலுக்குள் சசிகலா இருந்தபோதுகூட, எடப்பாடியாருக்கு முழு ஆதரவாக கருணாஸ் செயல்படாமல் இருந்ததே, சசிகலா மீதான விசுவாசத்திற்கு ஒரு உதாரணமாகும்.

எடப்பாடி தெளிவு
எனினும், சசிகலா ஜெயிலில் இருந்தபோது, எடப்பாடி பழனிசாமியிடம், நெருக்கம் இல்லாமல், விலகலும் இல்லாத போக்கை கடைப்பிடித்து வந்தார்.. அதிமுக அரசுக்கு 3 கோரிக்கைகளையும் அப்போது வைத்திருந்தார்.- ஒன்று, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.. மற்றொன்று மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும்.. தங்கள் கட்சிக்கு 2 சீட் தர வேண்டும்.. என்பதே அந்த 3 கோரிக்கைகளாகும்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், அந்த 3 கோரிக்கையுமே அவருக்கு நிறைவேறவில்லை.. அதுகுறித்து எதுவுமே அதிமுகவை அவர் விமர்சிக்காமல் இருந்தார்.. அதேசமயம், "எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் உருவாக்கப்பட்டவரா? எம்எல்ஏக்களால் உருவாக்கப்பட்டவரா" என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருந்தனர்.. அதற்கு கருணாஸ், "கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கிருந்த எல்லாருக்கும் தெரியும்.

வெயிட் & சீ
சசிகலா பற்றி இன்னைக்கு குறை சொல்பவர்கள்., அன்னைக்கு என்ன சொன்னாங்க என்று இன்னைக்கும் ஊடகங்களில் ஆதாரம் உள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். பதவியே இல்லாமல் மோடியை எதிர்த்தார் சசிகலா... வெயிட் & சீ, (Wait And See)" என்றெல்லாம் பேசியிருந்தார்..

கருணாஸ் - சீமான்
இதனால் எந்நேரமும் கருணாஸ் சசிகலா பக்கம் தாவுவார் என்றும், சசிகலா ஜெயிலில் இருந்து வெளிவந்ததும், முதல் நபராக சென்று சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஜெ.பிறந்த நாள் அன்றுகூட, ஒருசில கட்சி தலைவர்கள் சசிகலாவை சென்று நேரில் சந்தித்து பேசினர்.. சீமான் கூட சென்று சந்தித்து பேசி எல்லாருக்கும் ஷாக் தந்தார்.. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட கருணாஸ் அன்றைய தினம் செல்லவில்லை.. அவரை சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாகவும், விரைவில் சந்திப்பேன் என்று மட்டும் கூறியிருந்தார். கடைசிவரை சசிகலாவை அவர் சந்தித்து பேசவேயில்லை.

கருணாஸ்
இப்போது விஷயம் என்னவென்றால், அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்க போவதாக கூறியுள்ளார்.. தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "இப்போது சினிமாவில் பிஸியாக இருப்பதால் அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கான தொழில் சினிமா தான்.. அரசியல் கிடையாது... எனக்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைப்பதால் அரசியலில் பங்கேற்பதில்லை. அதனால், ஒதுங்கி இருப்பது போல் தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.

வாடிவாசல்
அதுமட்டுமல்ல, கடந்த மார்ச் மாதம் வாடிவாசல் படம் குறித்து கருணாஸ் பேசும்போது, "போலி வியாபார அரசியலை புறந்தள்ளிவிட்டு என்னுடைய கலைத்தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறேன்.. நீண்டகாலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசலே வாசல் திறந்து விட்டிருக்கிறது" என்று பூரித்துபோய் சொல்லி இருந்ததார்.. ஏற்கனவே தொகுதி பக்கம் கருணாஸை காணாமல், அம்மக்கள் அதிருப்தியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகிய நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக தற்போது கூறியுள்ளார்.. ஆகமொத்தம் கடைசிவரை சசிகலாவை சென்று இவர் சந்திக்கவேயில்லையே..!












Click it and Unblock the Notifications