"ஆன்டி கொரோனா ஸ்பெஷலிஸ்ட்" ஜெ ராதாகிருஷ்ணன்.. சுகாதார துறையிலிருந்து திடீர் டிரான்ஸ்பர் ஏன்?
சென்னை: சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டது ஏன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
ஜெயலலிதா காலத்தில் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட பணிகளை வகித்தவர் ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். ஜெயலலிதா மறைந்த போது சுகாதாரத் துறைச் செயலாளராகவும் இருந்தார்.
இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை செயலாளராக இருந்தார். இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சுகாதாரத் துறை செயலாளராக பீலா ராஜேஷ நியமிக்கப்பட்டார்.
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் துறை மாற்றம்? பெரிய அளவில் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் லிஸ்ட் ரெடி!
கொரோனா முதல் அலை
கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டார். ராதாகிருஷ்ணன் எப்போதும் மக்கள் நல பணிகளில் அதிகம் நாட்டம் காட்டுவது வழக்கம். கொரோனா காலத்திலும் மக்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி வந்தார்.
பேரிடர் மீட்பு துறை
பேரிடர் மீட்பு துறையில் இருந்த போது கூட புயல் , சுனாமி என்றால் முதல் ஆளாக மக்களோடு மக்களாக இருப்பார். அவர் பதவி வகிக்கும் எந்த துறையையும் சிறப்பாக செய்து முடிப்பதில் வல்லவர். இந்த நிலையில் திமுக ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்பேற்றவுடன் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பொதுவாக ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் நிர்வாக ரீதியிலான மாற்றம் என்பது நிகழத்தக்க ஒரு விஷயமாகும்.
சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை திமுக அரசு மாற்றினாலும் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணனை மட்டும் மாற்றவில்லை. இந்த செயல்பாட்டை உயர்நீதிமன்றமே பாராட்டியிருந்தது. அதாவது ஜெ ராதாகிருஷ்ணனை புதிய அரசு மாற்றாதது திருப்தி என கருத்து தெரிவித்திருந்தது.
3ஆவது கொரோனா அலை
இந்த நிலையில் 3 ஆவது கொரோனா அலையிலும் திறம்பட தனது பணியை செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 4 ஆவது அலை நம்மை அண்டாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் இடமாற்றப்படலாம் என்ற ஒரு தகவல் கடந்த சில நாட்களாக வெளியானது.
சுகாதாரத் துறை செயலாளர்
இந்த நிலையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத் துறை செயலாளராக இடமாற்றப்பட்டார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணனின் இடமாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் கேட்ட போது அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் கண்காணித்து வருவதை போல் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறார்.
மாற்றம் ஏன் ?
இதன் எதிரொலியாக அதிகாரிகள் மாற்றம் நடைபெறுகிறது. விரைவில் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பணியிடமாற்றத்தை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையாக நாம் கருத முடியாது. இந்த இடமாற்றத்தை ராதாகிருஷ்ணனே எதிர்பார்த்து காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்கள்.