ஓபிஎஸ்ஸின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?.. அவங்கதானா?.. என்ன செய்ய போகிறார் எடப்பாடியார்?
சென்னை: தேவர் ஜெயந்தி விழாவின் போது சசிகலாவுக்கு பச்சைக் கொடி காட்டுவது போல் பேசியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் திடீரென எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு அவரது மனமாற்றத்திற்கு 3 வகையான காரணங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுக ஒன்றிணைய வேண்டுமானால் சசிகலாவையோ அவரது குடும்பத்தினரையோ மீண்டும் அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஓ. பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து துணை முதல்வராகினார். பின்னர் சசிகலாவிடம் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பதவி செல்லாததாக்க அந்த பதவியையே பொதுக் குழு கூட்டி நீக்கிவிட்டு அதே அளவிலான அதிகாரங்கள் பொருந்திய ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை உருவாக்கினர்.
இந்த நிலையில் அதிமுகவில் கோஷ்டி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததால் தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காதது உள்ளிட்டவைகளால் இரு தலைமைக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் கூட எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட தனக்கோ தனது ஆதரவாளர்களுக்கோ வாங்கித் தரமுடியாத சூழல் ஓபிஎஸ்ஸுக்கு கடும் மன உளைச்சலை தந்தது.
வக்கிர எண்ணம் படைத்தோருக்கு வலை: பாலியல் வீடியோ பார்த்தவர்களை தட்டி தூக்கிய சிபிஐ!
தேவர் ஜெயந்தி
இதன் வெளிப்பாடுதான் தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தது என்கிறார்கள். சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஓபிஎஸ் வியூகம் வகுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனித்தனியாக வெள்ள நிவாரண பணிகளை ஆய்வு நடத்தி வந்த ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் திடீரென நேற்று முன் தினம் முதல் இணைந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். கடந்த மாத இறுதியில சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசியிருந்த நிலையில் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது 3 விதமான காரணங்கள் வெளியாகியுள்ளன.
காரணம் 1
காரணம் 1- சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசியும் அவர் எந்தவித சிக்னலையும் கொடுக்காமல் அவர் பாட்டுக்கு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இது ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் எதிர்ப்பை சம்பாதித்ததுதான் மிச்சம் என்பதை ஓபிஎஸ் உணர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவுக்கு தான் ஆதரவாக பேசியதை தென் மாவட்டத்து நிர்வாகிகளே விரும்பாதது ஓபிஎஸ்ஸுக்கு மேலும் ஷாக் ட்ரீட்மென்டை கொடுத்துவிட்டது. இதனால் ஊரோடு ஒற்று போவது போல் எடப்பாடியாருடன் ஓபிஎஸ் இணைந்துவிட்டாராம்.
காரணம் 2
காரணம் 2- கொடநாடு வழக்கில் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரச்சினை ஏற்படும் என ஓபிஎஸ் நம்புகிறாராம். கொடநாடு மர்ம கொள்ளை மற்றும் கொலை வழக்கை திமுக அத்தனை லேசில் விடாது என்பதையும் ஓபிஎஸ் ஆணித்தரமாக நம்புகிறாராம். இதனால் எப்படியும் எடப்பாடிக்கு சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டால் அன்றைய தினம் கட்சியுடைய முழு கட்டுப்பாடும் தனது கைக்கு வந்துவிடும் என நம்புகிறாராம்.
காரணம் 3
காரணம் 3- திமுகவுக்கு எதிரி என்றால் அது சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும்தான் என சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் மீது திமுகவுக்கு எப்போதுமே சாப்ட் கார்னர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்டதிலிருந்தே அறியப்படுகிறது. எனவே சசிகலாவா ஓபிஎஸ்ஸா என வந்தால் திமுக ஓபிஎஸ்ஸுக்குத்தான் ஆதரவளிக்கும். இதனால் திமுகவின் மறைமுக ஆதரவுடன் அதிமுகவை கைப்பற்றிக் கொள்ளலாம் என ஓபிஎஸ் நினைக்கிறாராம். அதாவது பழம் நழுவி பாலில் விழுந்து அப்படியே டைரக்ட்டாக வாயில் வந்து விழும் என்பது ஓபிஎஸ்ஸின் கணக்காம். அப்படியிருக்க எதற்காக சசிகலா பக்கம் போய் கட்சியினரின் விரோதத்தை மேலும் வளர்த்துக் கொள்வது என்ற நிலைக்கு ஓபிஎஸ் வந்துவிட்டதும் அவரது தற்போதைய நிலைப்பாடு மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கெனவே எடப்பாடி பழனிச்சாமியுடன் இருந்து கொண்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தும் செல்வாக்கு இல்லாத நிலையில் இருக்கும் போது சசிகலாவிடமும் போய் அங்கும் தலைமை பொறுப்பில் இல்லாமல் அவருக்கு கீழே எதற்காக செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் கருதுவதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதனால் அதிமுகவை தான்தான் தலைமையேற்க வேண்டும், யாருடைய தலைமையின் கீழும் செயல்படக் கூடாது என ஓபிஎஸ் கருதுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.