6 பேர் விடுதலை.. "உச்சநீதிமன்றத்தின் குட்டுகள்" ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவாரா? கி.வீரமணி கேள்வி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவாரா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்றும் உத்தரவிட்டது.

கி.வீரமணி வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு திமுக, பாமக, விசிக, மதிமுக, பாமக, திராவிட அமைப்புகள் என ஏராளமானோர் வரவேற்பளித்துள்ளனர். இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை வரவேற்கிறோம்.

பதவி விலகுவாரா ஆளுநர்?
ஏற்கெனவே தந்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றம் இதனைத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது - சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு 'குட்டு'கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்! இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து தவறாமல் ஆளுநர்கள் நடக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக வாக்குறுதி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் கோப்புகளில் ஒன்றை நீதித்துறை வழி முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications