ஓபிஎஸ்-ஐ கிண்டல்செய்தால்.. வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.. அன்புமணிக்கு அதிமுக எச்சரிக்கை
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தைப் பற்றிக் கிண்டலாக அன்புமணி ராமதாஸ் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தை பற்றிக் கிண்டலாக அன்புமணி ராமதாஸ் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் புகழேந்தி
இது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கூறுகையில், "தமிழ்நாட்டில் 53 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று, ஆட்சி புரிந்து வருகின்றன. இதில் அதிக முறை அதிமுக தான் ஆட்சியிலிருந்து உள்ளது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வியை மக்களால் நிர்ணயிக்கக் கூடிய ஒன்று.
பாமக தோல்வி
அதிமுக கூட்டணியிலிருந்து கொண்டு, 23 இடங்களைப் பெற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பற்றி தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார். பாமக இல்லை என்றால் 20 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் எனக் கூறுகிறார். 23 இடங்களில் 18 தோற்றதை பற்றி பாமக முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதில் யாரும் தலையிட விரும்பவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தலைவர்களைப் பற்றிப் பேசுவது முறையானதல்ல. பாமகவால் எந்த வகையிலும் எந்த உதவியும் இல்லை. இதை உணர வேண்டும்.
இப்படிச் சொல்லலாமா
போடிநாயக்கனூர், எடப்பாடி, அவினாசி உள்பட 51 தொகுதிகள் 2016இல் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துள்ளோம். ஒரத்தநாடு, கன்னியாகுமரி உள்பட 9 தொகுதிகளில் பாமகவிற்கு எந்த செயல்பாடுகளும் கிடையாது. 6 தொகுதிகளில் மட்டுமே பாமக செயல்பாடுகள் உள்ளன. நிலைமை இப்படியிருக்க பாமக இல்லை என்றால் அதிமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என சொல்லலாமா.?
ராஜ்யசபா எம்பி
தேக்கு மரத்தில் மரங்கொத்தி அமர்ந்து கொத்திக் கொண்டு இருந்தபோது, சிறிய சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டதும், தான் கொத்தியாலே தேக்கு மரம் விழுந்து விடும் என மரங்கொத்தி நினைத்ததாம். அது போல் அன்புமணி ராம்தாசின் பேச்சு உள்ளது. ஒ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால் தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்பி ஆனார். அதிமுக பற்றி தவறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்க முடியாது
எங்கள் கட்சித் தலைவர்களைக் குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கூட்டணியில் சேருவது பின்னர் வெளியே வருவது. எங்களால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை ஏற்க முடியாது. பாஜக, பாமக கட்சிகளுடன் பயணித்தால் தோற்றோம் என்று எங்கள் கட்சித் தலைவர்களோ நிர்வாகிகளோ பேசவே இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்டோம். நல்லெண்ண அடிப்படையில் தான் 10.5 சதவீதம் அறிவிக்கப்பட்டது. இது மற்ற வகுப்பினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது" என்றார்.
சும்மா இருக்க மாட்டோம்
மேலும், ஒ.பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தால் முட்டாள்தனமானது என்று கூறிய பெங்களூர் புகழேந்தி, சின்ன கட்சி அதிமுகவைக் கிண்டல் செய்ததால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தந்த 49 தொகுதிகளில் 40 தொகுதிகள் தோல்வி என்றும் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற கட்சி கொறடா உள்படப் பதவிகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றார். கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு, மத்திய அரசு என்ற பிரச்சினை தேவையில்லாத ஒன்று என்றும் அதேநேரம் ஒன்றியம் என்பதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.