மிரட்டலுக்கு அடிபணியும் நாடு அல்ல இந்தியா.. சீனாவால் இதை உலகமே தெரிந்துகொண்டது - ஜெய்சங்கர் பேச்சு
சென்னை: "மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை சீனா மூலமாக உலகமே தெரிந்து கொண்டிருக்கிறது" என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், இந்திய ராணுவத்தினரால் அண்மையில் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த அத்துமீறலானது இந்தியாவை கோபம் அடையச் செய்துள்ளது. அதுபோல, சீனாவை சமீபகாலமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி வருகிறார்.
அந்த வகையில், சென்னை நேற்று நடைபெற்ற துக்ளக் இதழின் 53-வது ஆண்டு விழாவில் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
சிலருக்கு வயிறு எரியுது! இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க முடியல! பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் சுளீர் பதில்
ஆக்கிரமிக்கும் எண்ணம் கிடையாது
அடுத்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும் அல்லது அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாடு இந்தியா கிடையாது. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நம் நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது. அதே சமயத்தில், இந்தியாவின் எல்லைகள் மீது யாராவது கண் வைத்தால் இந்தியாவின் ஆக்ரோஷத்தை அவர்கள் பார்ப்பார்கள். எந்த சூழலிலும் நம் நாட்டின் ஒரு அங்குல மண்ணை கூட எதிரிகளால் கொண்டு செல்ல முடியாது.
சீனாவுக்கு விழுந்த அடி
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம். இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் சமயம். அந்த நேரத்தில், லடாக்குக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது. எப்படியாவது லடாக்கை கைப்பற்றி எல்லைக் கோட்டை தன்னிச்சையாக மாற்றியமைக்க வேண்டும் என சீனா முயற்சித்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீனா இறக்கிவிட்டது. அப்போதுதான், இந்திய ராணுவத்தின் உண்மையான பலத்தை சீனா பார்த்தது. லடாக்குக்குள் நுழைந்ததற்காக சீனாவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி உறுதியானதாக இருந்தது.
"அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நாடு அல்ல"
இதுவரை ஒருசில நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவின் இந்த ஆக்ரோஷ முகம் தெரிந்திருந்தது. ஆனால், சீனாவுக்கு நாம் கொடுத்த பதிலடியை இன்று உலகமே பார்த்தது. இந்தியா யாருக்கும் அஞ்சி நடுங்கும் நாடு அல்ல. எந்தவித மிரட்டலுக்கும், அச்சறுத்தலுக்கும் அடிபணியும் நாடு அல்ல என்பதை சீனா மூலமாக உலகமே தெரிந்து கொண்டிருக்கிறது. அதேபோல், நாட்டின் எல்லையையும், அதன் பாதுகாப்பையும் உறுதிசெய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இந்தியா செல்லும் என்பதையும் உலக நாடுகள் உண்ரந்துள்ளன.
கடுங்குளிரில் ராணுவ வீரர்கள்
தற்போது சீன எல்லை முழுவதும் லட்சக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் நமது எல்லை பாதுகாப்பாக இருக்கிறது. அங்கு தற்போது கடுமையான குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது. எனினும், நம் நாட்டை காக்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன் நம் வீரர்கள் அங்கு காவல் இருக்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்காக நாம் தலை வணங்குவோம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.