தெரிந்தும் தெரியாமலும்.. அறிந்தும் அறியாமலும்.. டபுள் டபுளாக பேசிய சூப்பர் ஸ்டார்.. மறக்க முடியுமா!
சென்னை: 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த திரைப்படங்கள் மறக்க முடியாதவை இருந்தாலும் அவரது பேச்சுகள் அனைத்தும் தலைப்பு செய்தியானதை மறக்க முடியாது. அதிலும் அவர் இரட்டை நிலைப்பாட்டில் பேசிய பேச்சுகளையும் பட்டும்படாமல் பேசிய பேச்சுகளையும் யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி சொல்லும் வரை அவர் இதுக்கு ஏன் கருத்து சொல்லவில்லை, அதுக்கு ஏன் கருத்து சொல்லவில்லை என யாரும் கேட்டதில்லை. ஆனால் எப்போது அரசியலுக்கு வருவேன் என சொன்னாரோ அன்று முதல் ரஜினி கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறார்.
சில கருத்துகளை தைரியமாகவும் சில கருத்துகளை பட்டும்படாமலும் அவர் கூறுவதுதான் விமர்சனங்களுக்கு காரணமாகிவிட்டன.
விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக!
பலசாலி
லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து ரஜினியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது யார் பலசாலி? 10 பேர் சேர்ந்து கூட்டணி இருக்கிறார்களே? அப்படியென்றால் யார் பலசாலியாக இருப்பார்? என்று கேட்டார்.
ரஜினி பேசினார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றவர்களின் விடுதலைக்கான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து கேட்டபோது , யார் அந்த 7 பேர் என்றும் கேட்டார். அவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி சர்ச்சையானது. அட பாஜகவிற்கு எதிராக ரஜினி பேசிவிட்டார் என்று எல்லோரும் பேசினார்கள்.
சர்ச்சை
இந்த சர்ச்சையை தொடர்ந்து மறுநாளே ரஜினிகாந்த் இன்னொரு பேட்டி அளித்தார். அதில், அந்த 7 பேர் யார் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மோடிதான் பலசாலி. அவரைதான் எல்லோரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள், அதனால் அவர்தான் பலசாலி என்று பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி பேசினார்.
குழந்தையின் ஆத்மா
கடந்த அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த் சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.
விஷயம்
ஆனால் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு குறித்தும் ஆழ்துளை கிணறுகளில் சிக்கியோரை மீட்க புதிய சாதனத்தை கண்டுபிடிக்காதது குறித்தும் அவர் எந்த விஷயத்தையும் குறிப்பிடவில்லை. அது போல் நவம்பர் மாதம் கமல் பிறந்த நாள் விழாவில் இயக்குநர் பாலச்சந்தரின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது.
நிர்வாகிகள்
இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது. திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன். மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது என்றார். இதனால் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அப்படியே ஸ்ட்ர்னாகி போயினர்.
தனிப்பட்ட விவகாரம்
சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார். அப்போது திருவள்ளுவர் ஒரு ஆத்திகர். நாத்திகர் கிடையாது. அதை யாரும் மறுக்க முடியாது. பாஜக அலுவலகத்தில் அவர்களுடைய ட்விட்டரில் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசியுள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம். காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன என்றார்.
பிரச்சினைக்கு தீர்வாகாது
இது போல் ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டிலிருந்து ரஜினி மாறி மாறி பேசி வந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து நாட்டில் நடைபெறும் போராட்டம் குறித்து ரஜினி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை, கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது.
கருத்து
தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டு கொண்ட ரஜினி எந்த இடத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.