தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..என்னென்ன தகுதிகள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன் அடிப்படையில், தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கும், அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பள்ளி வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலக மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 6ம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications