வந்தா 2 கிட்னியோட வா, கட்டிக்கலாம்.. கறார் காதலன்.. அதிர்ச்சி அடைந்த காதலி.. போலிஸில் புகார்!
ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "2 கிட்னியோடு வந்தால்தான் கல்யாணம்" என்று கறாராக காதலன் சொல்லி விட்டதால் போலீசில் புகார் அளித்துள்ளார் இளம்பெண்.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கு வயது 32. நித்யாவுக்கு ஒரே ஒரு கிட்னிதான் உள்ளது.
பிறவியிலேயே இந்த குறை இருந்தாலும் நித்யாவுக்கு 4 வருடத்திற்கு முன்புதான் வீட்டில் இந்த உண்மையை சொல்லி உள்ளார்கள். இந்தநிலையில், இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ் என்ற 29 வயது நபர் நித்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் நித்யாவை அவருக்கு பிடித்து போக கல்யாணம் செய்துகொள்வதாக வந்து சொல்லி இருக்கிறார்.
ஒரே ஒரு கிட்னி
ஆனால் விக்னேஷ் வயதில் சிறியவர் என்பதால் இதற்கு நித்யா மறுத்துள்ளார். எனினும் வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார். அப்போது தனக்கு வலது பக்கத்தில் மட்டும் கிட்னி இருப்பதாகவும், இது தனக்கு பிறவி குறை என்றும் கூறினார்.
குடும்ப செலவு
இதையடுத்து கடந்த வருடம் இரு வீட்டிலும் காதலை சொன்னதன் பேரில், பெற்றோர்களும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தினார்கள். ஆனால் நித்யாவின் தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டதால் செலவு குடும்பத்தை நெருக்கி உள்ளது.
20 சவரன் நகை
இந்தநிலையில் விக்னேஷ் வீட்டில் ஏற்கனவே போட்ட நகை இல்லாமல் மேலும் 20 சவரன் நகை அதிகமாக வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு பெண் வீட்டில் மறுப்பு சொன்னதாகவும் தெரிகிறது. பிரச்சனை இங்கிருந்துதான் வெடித்துள்ளது. இப்போது நிச்சயமான நிலையில், இரண்டு கிட்னியோடு வந்தால்தான் என்று விக்கேஷ் சொல்லுகிறாராம்.
இரண்டு கிட்னி
இதனால் விரக்தி அடைந்த நித்யா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருக்கிறார். நிச்சயமான நிலையில் விக்னேஷுடன் நெருங்கி பழகினேன் என்றும், இப்போது கிட்னியை காரணம் காட்டி வேண்டாம் என்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.