தலையில் முக்காடு போட்ட அதிமுகவினர்.. கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒரே சலசலப்பு.. என்ன நடந்தது?
கோவை: கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதேபோல, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் கவுன்சிலர்களும் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மாநகராட்சிக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளுக்கு முக்கிய வருவாயாக இருப்பது சொத்து வரி. வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் மூலம் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிகளின் மூலமாக கிடைக்கும் வருவாயின் மூலமாகத்தான் பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொத்துவரி மற்றும் தொழில்வரியை எந்தவொரு தாமதமும் இல்லாமல் கட்டும் மக்களுககு மாநகராட்சி சார்பில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில் சொத்துவரி செலுத்துவோருக்கு வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2025 - 26 ஆம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா, பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாநகராட்சியில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாகவும், 6 சதவீத வரியினை திரும்ப பெற வேண்டும் என்றும் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சிக் கூட்டம் துவங்கிய நிலையில் சொத்து வரி உயர்வுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மேயர் ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அதிமுக கவுன்சிலர்களை மேயர் ரங்கநாயகி சமாதானப்படுத்தினார்.
அப்போது, சொத்து வரி குறித்து அரசிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ரங்கநாயகி தெரிவித்த நிலையில், அவரது வாக்குறுதியை ஏற்க மறுத்து கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, கோவை மாநகராட்சியில் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தை ஈஷா யோகா மையம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், மின் மயானத்தைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தந்தை அவர்களுக்கு நீடிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஈஷா யோகா மையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் மாயன பராமரிப்பு பணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஆத்துப்பால மின் மயான பராமரிப்பை ஈஷா மையத்திற்கு வழங்கும் தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக கூறிய மேயர் ரங்கநாயகி, அடுத்த மாதம் இதுகுறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதங்களால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications