"மற்ற கட்சிகள் சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்றாங்க.. பா.ம.க மட்டும்தான்..”- பட்டென சொன்ன அன்புமணி!
கோவை : தமிழக அரசியல் கட்சிகள் சாதியை வைத்து மக்களை பிரித்து வருவதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சாதி ரீதியாக பாமக மீதான விமர்சனத்தில் உண்மை இல்லை என்றும் எங்கள் வளர்ச்சியை பிடிக்காத திராவிடக் கட்சிகள் எங்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திட்டமிடுகின்றனர் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக பா.ஜ.கவின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கோவை வந்த அன்புமணி ராமதாஸுக்கு பாமகவினர் பூங்கொத்து கொடுத்தும் ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். கோவை விமான நிலையத்தில் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழக பா.ஜ.கவின் செயல்பாடு குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. 'பாமக 2.0' செயல் திட்டம் அடிப்படையில் எங்கள் கட்சியில் மறு சீரமைப்பு நடைபெற்று வருகிறது. இது தமிழக முன்னேற்றத்தை சார்ந்தது.

சாதி பிரிவினை கட்சிகள்
தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் சாதி, மதம், இனம், மொழியை வைத்து பிரித்து வருகின்றனர். பாமக மக்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. சாதி ரீதியாக பாமக மீதான விமர்சனத்தில் உண்மை இல்லை. எங்கள் வளர்ச்சியை பிடிக்காத திராவிடக் கட்சிகள், எங்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திட்டமிடுகின்றனர். அந்த திட்டம் நிறைவேறாது. மக்கள் எங்களை புரிந்து கொண்டிருக்கின்றனர்.

அனுமதிக்கவே கூடாது
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 அதிகரித்துள்ளனர். அது போதுமானது இல்லை. இதை வைத்து விவசாயம் செய்ய இயலாது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக வரும் 17-ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்த உள்ளனர். அதில் கர்நாடகாவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரி படுகையைில் அணை கட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை மீறி கர்நாடகா அரசு இந்தத் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஆனால், மத்திய அரசு இதை ஆதரித்து வருகிறது. தேர்தல் காரணமாக பாஜக அரசு இதை செய்து வருகிறது. ஒருபோதும் தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது.

நூல் விலை
நூல் விலை அதிகரித்து உள்ளதால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 80 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. பத்து மாதங்களுக்கு முன்பு கிலோ 220 ரூபாய் இருந்த நூல் விலை இன்று 480 ஆக உயர்ந்துள்ளது.சுமார் 120 விழுக்காடு உயர்வால் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் பதுக்கலை தடுக்க வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது. அதை நடப்பாண்டே நிறைவேற்ற வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை வரவேற்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி, பாமக கடந்த ஏழு ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தி 20 அறிக்கை மற்றும் 25 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளோம். அதிமுக அரசு இதற்கான அவசர தடை சட்டம் கொண்டு வந்தது. அதற்கு பிறகு 2020 நவம்பர் முதல் ஆகஸ்ட் 2021 வரை ஒரு தற்கொலை கூட நடக்கவில்லை. பின்னர் உயர் நீதிமன்றம் அவசர சட்டத்திற்கு தடைவிதித்த பிறகு இதுவரை 23 பேர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. எனவே இந்த விளையாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

மூன்று பிரச்சனைகள்
மது, போதை மற்றும் ஆன்லைன் சூதாட்டம் என்ற இந்த மூன்று முக்கிய பிரச்சனைகளால் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பாதிப்புக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. மது ஒழிப்பிற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை பழக்கத்தை தடுத்து நிறுத்த தனி கவனம் செலுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications