உலக செவிலியர்கள் தினம்.. நீங்கதான் கடவுள்னு கூறி.. சாஷ்டாங்கமாக காலில் விழுந்த கோவை மருத்துவமனை டீன்
கோவை: கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் கொரானா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப் பணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலக செவிலியர் தினம்... தன்னுயிர் கருதாது மன்னுயிர் காக்கும் செவிலியர்களை வாழ்த்துகிறேன் -முதலமைச்சர்
கொரோனா தொற்று
இந்த நிலையில் கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத்துவமனையான இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு மருத்துவமனை டீன் ரவீந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
மருத்துவமனை
இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை டீன் ரவீந்திரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என புகழாரம் சூட்டினார்.
நெகிழ்ச்சி
தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட மருத்துவமனை டீன் ரவீந்திரன் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி அழுது கண்ணீர் விட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சேவை
உண்மையில் செவிலியர்களின் பணிகள் அளப்பரியது. கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து ஒவ்வொரு நாளும் நோயாளிகளுக்கும் புன்முறுவலுடன் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பணி சிறக்க நாம் வாழ்த்துவோம்!