செல்போன் அழைப்பில் வந்த எமன்...கார் மீது பைக் மோதியதில் தந்தை கண் முன்னே மகன் பலி - 3 பேர் படுகாயம்
கோவையில், செல்போன் பேசிக்கொண்டே பைக் ஓட்டி, நின்றிருந்த கார் மீது மோதியதில் தந்தை கண் முன்னே 7வயது மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வாகனத்தில் செல்லும் போது செல்போன் வந்தால் எடுக்க வேண்டாம் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம் என்று போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை அருகே குடும்பத்தோடு இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் செல்போன் பேசியதால் கார் மீது மோதி தனது மகனை பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளில் காயமடைவதும், மரணங்களும் நிகழ்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கும், எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசலாம். செல்போன் பேசிக்கொண்டே சாலைகள், ரயில்வே தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.
கோவை, கருமத்தம்பட்டி, முதலிப்பாளைம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் செல்போன் பேசிக்கொண்டே இரு சக்கர வாகனத்தை இயக்கியதால் விபத்தில் சிக்கி தனது மகனை பறிகொடுத்தள்ளார். 37 வயதான அசோக்குமார் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரம்யா இவர்களின் மகன் பிரணவ்,7, சாய்,5 என்பதாகும்.
ரம்யா தனது அம்மா வீட்டிற்கு செல்ல கணவனுடன் பைக்கில் புறப்பட்டார், இரு சக்கர வாகனத்தின் முன் பக்கம் பிரணவ் பின் பக்கம் சாய் மனைவி ரம்யா ஆகியோரை அமரவைத்து, அசோக்குமார் பைக் ஓட்டிச் சென்றார்.
திருப்பூரை சேர்ந்தவர் சண்முகம்,54 என்பவர் தனது காரில் சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தார். கனியூர் சுங்கச்சாவடி அருகே வந்து தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது அந்த வழியாக வந்த அசோக்குமார் பைக்கை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசினார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியது.
இதில் அசோக்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அதில் சம்பவ இடத்திலேயே பிரணவ், உயிரிழந்தான், மற்ற மூன்று பேரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்,கருத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications