"இது இந்துக்கள் வாழும் பகுதி.. மற்றவர்கள் மத பிரச்சாரம் செய்ய கூடாது.." கோவை அருகே வைக்கப்பட்ட பேனர்
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே, இது, இந்துக்கள் வாழும் பகுதி என்றும், பிறர் மதப்பிரச்சாரம் செய்யவும், மதக் கூட்டங்கள் நடக்கவும் அனுமதி இல்லை என வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கோவை மாவட்டத்தில் அண்மைகாலமாக போஸ்டர் கலாசாரம் அதிகரித்து வருகிறது. எங்கு திரும்பி பார்த்தாலும் அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர். இதையடுத்து, 'பொது இடங்களில் போஸ்டர் ஒட்டக் கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. எனினும், போஸ்டர்களை ஒட்டுவதை யாரும் நிறுத்துவதாக தெரியவில்லை.
கோவையில் திமுகவினரும், பாஜக-வினரும் போட்டிப் போட்டுக் கொண்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதனால் கோவையில், கடந்த வாரம் இருத்தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பாஜகவினர் தங்களது செல்வாக்கு அதிகரிக்க மாவட்டம் முழுவதும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் அருகே, சர்ச்சையான வகையில் அமைக்கப்பட்டுள்ள பேனர், சமூக வலைதளங்களில் பரவி தற்போது பெரும் பேசுபொருளாகி மாறியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் சர்ச்சையினை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர் காவி நிறத்தில் "எச்சரிக்கை" என்ற பெரிய எழுத்துக்களுடன், "இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப்பிரச்சாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை" என்றும் எழுதப்பட்டுள்ளது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என்ற வாசகங்களும் அந்த பேனரில் இடம் பெற்றுள்ளன.
மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகை தான், தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து காடுவெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வத்திடம் கேட்டபோது, அண்மையில் சிலர் காடுவெட்டி பாளையம் பகுதியில் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்த பேனரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர், பிற மதத்தினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!