கோவை டூ பாலக்காடு ரயில் பாதை.. இது மட்டும் சக்சஸ் ஆனால்.. மொத்த கோயம்புத்தூருக்கும் ஹேப்பி
கோவை: கோவை மாநகரத்தை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது. பாலக்காடு செல்லும் கனவாய் உள்பட பல்வேறு பகுதிகள் வனப்பகுதிகள் ஆகும். இங்குள்ள தண்டவாள பகுதிகளில் யானைகள் அடிக்கடி வலம் வருவது வழக்கம்.இப்படி முகாமிடும் காட்டு யானைகளை விரட்ட தேனீக்கள் பறப்பது போல் ஓசை எழுப்பும் டிரோன்களை வாங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவை மாநகரம் மிகப்பெரிய தொழில் நகரம் என்றாலும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ள அற்புதமான பகுதியாகும். கோவை மாநகரில் இருந்து தொண்டாமுத்தூரை கடந்தால், இதேபோல் காரமடையை கடந்தால், மதுக்கரையை கடந்தால் அடர்ந்த வனப்பகுதிகள் வரும். இதன் காரணமாக கோவை கோட்ட வனப்பகுதியில் கோவை, மதுக்கரை, போளு வாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப் பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. நீலகிரி மாவட்டம், பாலக்காடு மாவட்டத்திற்கு இடம் பெறும் பகுதியாக கோவை மாவட்ட வனப்பகுதி உள்ளது.

யானைகளின் வழித்தடம் என்று அழைக்கும் அளவிற்கு பாலக்காடு முதல் மேட்டுப்பாளையம் வரை(மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகள் உள்ளன. இதன் காரணமாக வெள்ளியங்கிரி மலை, மருதமலை, மதுக்கரை, காரமடை போன்ற பகுதிகளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். இன்னும் தெளிவாக சொல்வது என்றால் கேரளாவில் இருந்து இடம் பெயரும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப் பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) திகழ்கிறது.
இதன் காரணமாகவே கோவை கோட்ட வனப்பகுதியில் காட்டு யானைக ளின் நடமாட்டம் மிக அதிகமாகும். அவை தான் தொண்டாமுத்தூர் முதல் காரமடை வரை உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரையில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரயில் தண்டவாளம் செல்கிறது. இதில் தண்டவாளம் ஏ வனப்பகுதி வழியாக 1.8 கி.மீ. தூரமும், தண்டவாளம் பி 3 கி.மீ. தூரமும் செல்கிறது. இந்த 3 தண்டவாளமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கின்றன. அதை கடந்து செல்லும்போது ரயிலில் அடிபட்டு காட்டு யானைகள் உயிரிழந்தன.
இதைத்தொடர்ந்து மதுக்கரை அருகே வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் தண்டவாளத்தை எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது அதன் வழியாக காட்டு யானைகள் எளிதாக தண்டவாளத்தை கடந்து சென்று வருகிறது.
மேலும் தண்டவாள பகுதியில் காட்டு யானைகள் நிற்பதை கண் காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் (ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய தெர்மல் கேமரா) பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் வனத் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று தண்டவாளத்தின் ஓரத்தில் நிற்கும் காட்டு யானைகளை துரத்தி வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் புதிய முயற்சியாக டிரோன்கள் மூலம் காட்டு யானைகளை துரத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு நடத்தி, டிரோன் வாங்க உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த அறிக்கையை அரசு ஏற்று நிதி ஒதுக்கியதும் டிரோன்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் மதுக்கரை வனப் பகுதியில் தண்டவாளம் மற்றும் அதன் அருகே முகாமிடும் காட்டு யானைகளை துரத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்..
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், கோவை மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் முகாமிடும் காட்டு யானைகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிகிறோம். பின்னர் அதனை நாங்கள் (வனத்துறை) நேரடியாக சென்று துரத்தி வருகிறோம். தற்போது புதிய முயற்சியாக டிரோன்கள் மூலம் காட்டு யானைகளை துரத்த முடிவு செய்திருக்கிறோம்.
இதற்காக 2 டிரோன்கள் வாங்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்ததும் தண்டவாளம் அருகே நிற்கும் காட்டு யானைகளை டிரோன்களை பறக்கவிட்டு, அதில் தேனீக்கள்போல் ஓசை எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டுவோம். காட்டு யானைகளை விரட்ட சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது. டிரோன்களை பறக்க விடுவதன் மூலம் காட்டு யானைகளை எளிதாக விரட்ட முடியும். இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால், கோவை கோட்டத்தில் பிற பகுதிகளிலும் இதுபோல் டிரோன்கள் மூலம் காட்டு யானைகளை துரத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications