சசிகலாவுக்கு சம்மன்! நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! கோடநாடு கொலை வழக்கில் போலீசார் நடவடிக்கை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சசிகலாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மாயமான சொத்து ஆவணங்கள் தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. ஓம் பஹதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார்.
மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5 ஆண்டு விசாரணை
இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார். இதனால் இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்கிறது. இதனால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை.

217 பேரிடம் விசாரணை
இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் விசாரைணை தீவிரப்படுத்தி உள்ளனர். பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் சில நாட்களுக்கு முன்பு கோவை பிஆர்எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை வழக்கு தொடர்பாக 217 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

சசிகலாவிடம் விசாரணை
இதற்கிடையே வழக்கு தொடர்பாக சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்நிலையில் தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சசிகலாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக கூறப்பட்டுள்ளது.

விசாரணை எதற்கு
இந்த விசாரணையின்போது மாயமான சொத்து ஆவணங்கள், சென்னை ஓட்டலில் கிடைத்த சொத்து ஆவணங்கள் குறித்த கேள்விகளை போலீசார் கேட்கலாம் என கூறப்படுகிறது. தமிழக அரசியலை பொறுத்தவரை சசிகலாவின் செயல்பாடு தற்போது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சசிகலாவிடம் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. இதனால் இது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications