சோதனை மேல் சோதனை.. "கைதாகிறாரா" டிடிஎப் வாசன்? மேலும் 3 பிரிவுகளில் வழக்கு - அதிவேக ரெய்டால் சிக்கல்
கோவை: டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பின் இருக்கையில் அமர வைத்து கோவையில் அதிக வேகமாக பைக் ஓட்டிச்சென்ற யூடியூபர் டிடிஎப் வாசன் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் கோவை சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
கோவையை சேர்ந்த வாசன் என்ற இளைஞர் பைக்கில் அதிக வேகத்தில் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவர் வெளியிடும் வீடியோக்கள் பைக் மீது ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிடித்துவிட படிப்படியாக இவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
இவரது வீடியோக்கள் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள், சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுக்களும் உள்ளன. 32 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருந்தாலும் இளைஞர்கள், சிறுவர்கள், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டவர்களை தவிர்த்து பெரும்பாலான மக்கள் TTF வாசனை அறிந்திருக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு வரை.

பிறந்தநாள்
கடந்த ஜூலை மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார். அங்கு அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று திக்குமுக்காட வைத்தனர். காவல்துறையினர் அங்கு வந்து TTF வாசனிடம் பேசி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. அதன் மூலம் அனைத்து தரப்பினராலும் அறியப்படும் முகமாக மாறினார் TTF வாசன்.

போலீஸ் எச்சரிக்கை
அப்போதே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வாசன் போன்ற நபர்கள் தாங்கள் ஏதோ நல்லது செய்கிறோம். பெரிய ஆட்கள் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு ரோல் மாடல் என்று நினைத்துக்கொண்டு டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். காவல்துறை இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம். வேகமாக செல்ல கூடாது." என்றார்.

ஜிபி முத்துவுடன் ரெய்டு
இந்த நிலையில் சமீபத்தில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து ரேஸ் உடை அணிந்து டிடிஎப் வாசனுடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கோவையில் ரெய்டு சென்றார். அப்போது டிடிஎப் வாசன் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி அதிவேகத்தில் சென்றதால் ஜி.பி.முத்து அலறினார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். வாசனும் இன்று தன்னுடைய யூடியூப் சேனலில் சரண்டர் ஆகப்போகிறேன் என்று பதிவிட்டார்.

வழக்குப்பதிவு
இந்த நிலையில், அவர் மீது கடந்த 21 ஆம் தேதி கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை சூலூர் காவல்நிலையத்திலும் டிடிஎப் வாசன் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து டிடிஎப் வாசன் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications