மகள் சொன்ன வார்த்தை.. உற்சாகம் ஆன மன்சூர் அலிகான்.. தொண்டமுத்தூரில் போட்டி உறுதி
கோவை: மகள் சொன்ன வார்த்தையால் உற்சாகம் அடைந்த மன்சூர் அலிகான், தொண்டமுத்தூர் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி என்றார். வெற்று சறுகுகள் தனக்கு சவாலாகாது என்றும் களத்தை பார்க்கபோவதாகவும் கூறினார்.
இவரது மகள் வெற்றியோ ,தோல்வியோ சந்தித்துவிட்டு வாருங்கள் கூறியதையடுத்தே போட்டியிடுவதென மனமாற்றம் அடைந்து உறுதியாக மாறி உள்ளார் மன்சூர் அலிகான்.
முன்னதாக தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வீடு வாடகைக்கு பார்த்த அவர், யாரும் வீடு தரவில்லை என்றும், போலீசார் பிரச்சாரததிற்கு அனுமதி மறுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மன்சூர் அலிகான்
தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடிகரும் சமூக ஆர்வலருமான மன்சூர் அலிகான் போட்டியிட அண்மையில் விருப்ப மனு அளித்திருந்தார். இதனையடுத்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் உக்கடம் மீன் மார்க்கெட் என பொது மக்களிடம் வித்தியசமாக வாக்குகளை சேகரித்தார். இந்நிலையில் அவர் பணம் வாங்கி விட்டதாக வதந்திகள் பரவத் தொடஙகியது.
வெளியான ஆடியோ
இதனால் மிகவும் வேதனை அடைந்த மன்சூர் அலிகான், தன்னை பற்றி இப்படி பரவும் வதந்திகளை பார்த்து கஷ்டமாக இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெறப்போவதாகவும் கூறி நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் இன்று வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் என்பதால் அவர் வாபஸ் வாங்கிவிடுவார் என்ற நிலையில் போட்டியிட போவதாக கூறியுள்ளார்.
மனசு வலித்தது
சின்னம் பெறுவதற்காக பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தவர் பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மனசு மிகவும் சங்கட்டமாக இருந்தது. நான் வீடு தேடி தொண்டாமுத்தூர் , கரும்புக்கடை, காந்திபார்க் , வடவள்ளி பகுதிகளில் அலைந்தேன். வீடு ஒகே ஆகி பின்பு இல்லை என்றார்கள். யார் எனக்கு வீடு கொடுக்கக்கூடாது எனக்கூறியது என தெரியவில்லை.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
இதுகுறித்து தன் மகளிடம் பேசியபோது வெற்றியோ ,தோல்வியோ சந்தித்து விட்டு வா என சொன்னதால் போட்டியிட வேண்டிய அவசியம் உருவானது. என்னுடைய உதவியாளர் மூலம் பணம் எவ்வளவு வாங்கி இருக்கிறார்கள் என கேட்டு , என்னை திருப்பி அனுப்ப பார்த்தார்கள். நான் விடப்போவதில்லை. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என நான் பார்த்துவிட்டுதான் போவேன்.
வெற்று சறுகுகள்
தென்னந்தோப்பு சின்னம் வாங்க இருக்கிறேன். வெற்றி பெற்றுத்தான் சென்னை செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.. பிரச்சார வாகனத்திற்கு உரிய அனுமதி தேர்தல் அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள்., மின்மினி நிலவாகது, மெட்டி தாலியாகாது, வெற்று சறுகுகள் மன்சூர் அலிகானுக்கு சவாலாகாது, களத்தில் பார்ப்பீர்கள்" இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்,