சீனாவில் இருந்து கோவை வந்த சேலம் நபருக்கு கொரோனா.. விமானத்தில் பயணித்த 166 பேர் கண்காணிப்பு..
கோவை: சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய சேலத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க துவங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா பாதிப்பு, பலி பதிவாகி உள்ளது. அங்கு உருமாறிய ஒமிக்ரான் பிஎப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாதரத்துறை பல்வேறு அறிவுரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
சீனாவில் பரவும் கொரோனா.. அமெரிக்கா போட்ட அதிரடி உத்தரவு.. விமான பயணிகளின் கவனத்துக்கு.. என்ன?
விமான நிலையங்களில் சோதனை
அதன்படி அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக ஆர்டிசிபிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது.
கோவை வந்த சிங்கப்பூர் விமானம்
மேலும் இந்தியாவில் அடுத்த 40 நாள் மிகவும் முக்கியமானதாகும். இந்த காலக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம் என மத்திய சுகாதாதரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு தனியார் விமானம் வந்திறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
சேலம் நபருக்கு கொரோனா
அப்போது சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சேலத்தை சேர்ந்த 37 வயது நிரம்பிய நபர் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையை தொடர்ந்து அவர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் சேலத்தை சேர்ந்த அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த நபர்?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் சோர்வு, காய்ச்சல் என எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சேலம் மாவட்டம் கருப்பகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் சேலத்தில் துணி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்கிருந்து ஊர் திரும்பியபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த விமானத்தில் தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
166 பேர் கண்காணிப்பு
அதன்படி அந்த விமானத்தில் தமிழகம் வந்தவர்கள் உள்பட 166 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேலம் நபர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 7 ஆக உயர்வு
மேலும் விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தை பொறுத்தவரை நேற்று வரை வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 6 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. துபாயில் இருந்து சென்னை வந்த 3 பேர் , ஹாங்ஹாங்கில் இருந்து சென்னை வந்த ஒருவர், சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்-மகள் என 2 பேர் என்று மொத்தம் 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களின் கொரோனா பாதிப்பு என்பது 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியா அளவில் பார்த்தால் கடந்த நேற்றைய நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து வந்த 6000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.