வெளியே போ கோத்த! இலங்கையில் அடாத மழையில் விடாது போராடும் மக்கள்! அடம்பிடிக்கும் ராஜபக்சே குடும்பம்!
கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நீண்ட விடுமுறையானது, கொழும்பு வீதிகளில் நடக்கும் "கோ ஹோ ஹோம்" போராட்டத்திற்கு பலம் சேர்த்ததாகவே தெரிகிறது.
கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஒன்று கூடிய மக்கள், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

கொட்டும் மழையில் முழக்கம்
ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய புயல்களுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகேயுள்ள கடற்பரப்பில் திரண்டிருந்தனர். ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தவாறும், ஆர்ப்பாட்டக்காரர்கள், பெரும்பாலும் இளைஞர்கள், கோத்தபய மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

மருத்துவர்களும் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். "எங்களிடம் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. நான் எப்போதும் மக்களை காப்பாற்ற உழைத்து வருகிறேன். ஆனால் இப்போது அவர்கள் இறப்பதை நான் காண்கிறேன், "என்று பெயர் வெளியிட விரும்பாத கொழும்பில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையைச் சேர்ந்த 35 வயதான பணியாளர் செவிலியர் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன
அண்மையில் ஆட்சியில் இருந்து விலகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 41 எம்.பி.க்களுடன் கோத்தபய முக்கிய சந்திப்பொன்றை நடத்தினார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. "ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இல்லாத ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தபயவை சமாதானப்படுத்துவதே சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்" என்று சிறிசேன கூறினார்.
Recommended Video

போராட்டத்திற்கு முடிவே இல்லை
ஆட்சியை கோத்தபய கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இடைக்கால ஏற்பாடு அவருக்குக் கீழ் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதேவேளை, மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தவறினால், கோத்தபயவின் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை முன்வைப்போம் என சஜித் பிரேமதாசவின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறும் சஜித் கோரி வருகின்றார். கோட்டாபய மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வரும் நிலையில், தீவு தேசத்தில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு முடிவே இல்லை என உலக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications