''காலி முகத்திடலை'' காலி பண்ண முடியாது. . இலங்கை அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் போர்க்கொடி
கொழும்பு: காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு அரசு கூறி வரும் நிலையில், வெளியேறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுவரை கண்டிராத பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் உள்பட அத்தியாவசிய மருந்து பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை சென்றது.

காலி முகத்திடலில் போராட்டம்
இதனால், மக்கள் எரிபொருளுக்காக அல்லோலப்படும் நிலை ஏற்பட்டது. இதனால், வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இலங்கை அதிபர் அலுவலகம் அருகே உள்ள காலி முகத்திடலில் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். திறந்தவெளி மைதானமான காலி முகத்திடலில் குடில்கள் அமைத்து தொடர் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறி போர்களம் போல காட்சியளிக்கும் சூழலும் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

ரணிலை பதவி விலக வலியுறுத்தி. .
கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். போராட்டக்காரர்களுக்கு பணிந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் கண்டனம்
இதனிடையே, கடந்த மாதம் 22 ஆம் தேதி போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நாளைக்குள் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள போராட்டக்காரர்கள், காலி முகத்திடலில் இருந்து வெளியேற முடியாது என தெரிவித்துள்ளனர்.

வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை
மேலும், காலி முகத்திடல் போராட்டம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடமாக முந்தைய ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது எனவும் எனவே, வெளியேறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ள போராட்டக்காரர்கள், போலீசார் நீதிமன்ற உத்தரவு எதையும் இதற்காக பெறவில்லை எனவும் கூறியுள்ளனர். போலீசாருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ள போராட்டக்காரார்கள், அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கிய நபரும், தொழிற்சங்க தலைவருமான ஜோஷப் ஸ்டாலினை போலீசார் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நீதிமன்ற உத்தரவை மீறி போராடியதாக கடந்த மே மாதம் 28 ஆம் தேதி ஜோஷப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications