போர்க்களமாக மாறிய இலங்கை...கோத்தபாயவிற்கு எதிராக திரும்பும் எம்பி.க்கள்... அதிபர் பதவிக்கு ஆபத்து
அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் மட்டுமே நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தீர்வு காண முடியும் என எம்பிக்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு : அழகு தேசமாக இருந்த இலங்கை இப்போது மக்களின் போராட்டத்தால் பற்றி எரிகிறது. மக்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து உயிரை காத்துக்கொள்ள திரிகோணமலையில் தஞ்சமடைந்துள்ளார் மஹிந்த ராஜபக்சே. இப்போது அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கும் நெருக்கடி முற்றுகிறது.
Recommended Video
ராஜபக்சே குடும்பத்தின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் உள்ள மக்களுக்கு ஒரு வேளை சோறு கூட கிடைக்காமல் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிபர் கோத்தபாய, பிரதமர் மகிந்தா ராஜபக்சே மற்றும் அமைச்சர், அரசாங்கத்தின் அதிகார பதவிகளில் அமர்ந்துள்ள ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 'பதவியை விட்டு ஓடு என்ற கோஷத்துடன் ஒரு மாதமாக அமைதியான முறையில் மக்கள் போராடி வருகின்றனர்.
அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர்கள், தொழிற்சங்கங்கள், புத்த துறவிகள் என அனைத்து தரப்பு மக்களும், ஒரே குரலாக ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறு போராடி வரும் மக்கள் மீது அதிகார மமதையில் கூலிப்படைகள் கொண்டு உருட்டுக்கட்டை மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி உள்ளார் மகிந்தா ராஜபக்சே. அன்று தலையில் தூக்கி வைத்து கொண்டியவர்களுக்கு எதிராக ஆயுதங்களை மகிந்தா தூக்கியதால், சிங்கள மக்கள் கொதித்து எழுந்து உள்ளனர்.
வன்முறைக்கு உங்க குண்டர்கள்தான் காரணம்! மகிந்தா ராஜபக்சவுக்கு சங்ககாரா சரவெடி பதிலடி..!
கொலை வெறித்தாக்குதல்
பல தரப்பிலும் நெருக்கடிகள் வலுத்ததால், கடந்த 9ஆம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் பதவி விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, மகிந்தா ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கொதித்தெழுந்த பொதுமக்கள், மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது.
பற்றி எரியும் இலங்கை
அரசுக்கு எதிராக ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், இந்த தாக்குதல் சம்பவத்தால் மேலும் கோபமடைந்து ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தின் பினாமிகளின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.
பதுங்கிய தலைவர்கள்
இந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி உட்பட 9 பேர் பலியாகி நாடே போராட்டக்களமாக மாறி உள்ளது. இந்த அசாதாரண சூழலில், பொது மக்களிடம் சிக்கினால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது கட்சி தலைவர்கள் பயந்து போய் பதுங்கி உள்ளனர். நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் ஆளும்கட்சியின் மற்ற பிற தலைவர்களும் உயிருக்கு பயந்து வெவ்வேறு இடங்களில் பதுங்கி உள்ளனர்.
கோத்தபாய உறுதி
பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசிய பின் நேற்றிரவு 9 மணிக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிப்பேன் என உறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் கோத்தபாய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தபாய பதவிக்கும் ஆபத்து
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனா தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பெரும்பாலான எம்பி.க்கள், அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்சே விலக வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அதன் மூலம் மட்டுமே நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தீர்வு காண முடியும் என கூறி உள்ளனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
மேலும், அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அவர் மீது நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அடுத்ததாக கோத்தபாய பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது.