இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 இந்திய நகரங்களில் கண்காட்சி நடத்த முடிவு!
கொழும்பு/டெல்லி: பொருளாதார பேரழிவில் தத்தளிக்கும் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் சுற்றுலாத்துறை தொடர்பான கண்காட்சிகள் நடத்த உள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரின் பெர்னாண்டோ கூறியதாவது: அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார சிக்கல்கள், கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லை. மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் . அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாகும். ஆகையால் இந்தியாவின் 5 மிக முக்கியமான நகரங்களில் இலங்கை சுற்றுலா தொடர்பான கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
இங்கிலாந்து உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்தனர். இந்த ஆண்டில் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறோம். இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளது. இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு ஹரின் பெர்னாண்டோ கூறினார்.