சர்ச் வாசலில் குப்பை.. கேள்விக்கேட்ட பாதிரியார்.. புரட்டி எடுத்த கவுன்சிலர் கணவர்! கடலூரில் 'ஷாக்'
கடலூர்: கடலூரில் தேவாலயத்தின் வாசலில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கொட்டியது குறித்து கேள்வி கேட்ட பாதிரியாரை அந்தப் பகுதி கவுன்சிலரின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கவுன்சிலரின் கணவரை கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தேவாலய வாசலில் குப்பை கொட்டிய ஊழியர்களை பிடித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவாலய ஊழியர்கள் வேறு பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை பயன்படுத்தியதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் வரும் அதிரடி மாற்றம்? பயணிகளுக்கு 'ஹேப்பி'யான அப்டேட்!
கடலூர் முதுநகரில் உள்ள 38-வது வார்டு பகுதியில் தூய கிறிஸ்துநாதர் தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது. பின்னர், சாப்பிட்டு முடித்த கழிவு இலைகளையும், பேப்பர் தட்டுகளையும் அந்தப் பகுதியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்டாமல் 42-வது வார்டில் உள்ள குப்பைத் தொட்டியில் தேவாலய ஊழியர்கள் கொட்டியுள்ளனர்.
தேவாலய ஊழியர்களின் இந்த செயலானது 42-வது வார்டில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் கவுன்சிலராக இருக்கும் விஜயலட்சுமியின் கணவர் செந்திலுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. திமுக ஆதரவாளரான செந்தில், தூய்மைப் பணியாளர்களை அழைத்து தேவாலய ஊழியர்கள் கொட்டிய குப்பையை அப்படியே எடுத்துச் சென்று சர்ச் வாசலிலேயே கொட்டுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களும் அந்தக் குப்பைகளை தேவாலயத்தின் வாசலில் கொட்டியுள்ளனர்.
இதனை பார்த்த தேவாலயத்தின் பாதிரியார் ஃபிலிப் ரிச்சர்டு, இதுதொடர்பாக கவுன்சிலரின் கணவர் செந்திலிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கவுன்சிலர் விஜயலட்சுமி, கணவர் செந்தில் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தேவாலயத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பாதிரியார் ஃப்லிப் ரிச்சர்டை செந்தில் சரமாரியாக தாக்கினார். இதில் பாதிரியாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான சிசிடிவி ஆதாரங்களுடன் அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்திலை கைது செய்தனர்.