1984 சீக்கிய கலவரம்.. காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து சீக்கியர்கள் தொடர்பான வழக்கில் காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து சீக்கியர்கள் தொடர்பான வழக்கில் காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1984ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலரால் கொலை செய்யப்பட்டார். இதனால் பெரிய கலவரம் மூண்டது.
சீக்கிய பாதுகாவலர் அவரை கொலை செய்த காரணத்தால் நாடு முழுக்க சில அமைப்புகளும், இந்திரா காந்தி ஆதரவாளர்களும், காங்கிரஸ் கட்சியினரும் கலவரம் செய்தனர்.இந்த கலவரத்தில் 2800 பேர் இறந்ததாக அரசு ஆவணங்கள் கூறுகிறது. அதிகாரப்பூர்வமில்லாமல் 8000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐந்து பேர் கொலை
டெல்லியில் மட்டும் 2100 பேர் இறந்தனர். இந்த கொலைகள் தொடர்பான ஒரு வழக்கில்தான் இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ராஜ்நாகரில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமார் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.
தீர்ப்பு வழங்கினார்
இந்த கொலை வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம், காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமார் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலவான் கோக்கர், முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால், கிரிதார்லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும் இருவருக்கு 3 வருட சிறை தண்டனை வழங்கியது.
வழக்கு விசாரணை
இதையடுத்து காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்தது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் எஸ் முரளிதர் மற்றும் வினோத் கோயல் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 29ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஆயுள்
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி காங்கிரஸை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 30 வருடம் கழித்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.