2002 குஜராத் வன்முறை- பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு டிஸ்மிஸ் - உச்சநீதிமன்றம்
டெல்லி: 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் தொடர்பான வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்தது.
2002-ம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவைப்பு படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் மத மோதல்கள் நடைபெற்றன.
குஜராத் முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த மோதலில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
மோடி உள்ளிட்டோர் விடுதலை
குஜராத் படுகொலைகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இவ்விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், குஜராத் வன்முறைகள் தொடர்பாக அப்போதைய மாநில முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட 64 பேரை விடுதலை செய்தது. மோடி உள்ளிட்டோருக்கு எதிரான புகார்களுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்றது இந்த விசாரணைக் குழு.
மோடி விடுதலைக்கு எதிராக அப்பீல்
மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிராக அகமதாபாத் கீழ் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றங்களில் படுகொலை செய்யப்பட்ட காங். எம்.பி. ஜாஃப்ரி மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். இதேபோல சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத்தும் மேல்முறையீடு செய்திருந்தார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சிடி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மனுக்கள் டிஸ்மிஸ்
பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதாவது 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை என்ற விசாரணைக் குழுவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.