25 ஆண்டு வரலாறு மாறியது.. துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கரின் 4 முக்கிய சாதனை!
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றதன் மூலம் 1997 முதல் நடைபெற்ற தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெற்று வாகைசூடிய நபர் உள்ளிட்ட 4 முக்கிய சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதியாக தேர்வான ஜெகதீப் தன்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து -மார்கரெட் ஆல்வாவுக்கும் வாழ்த்து
துணை ஜனாதிபதி தேர்தல்
நேற்று துனை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நேற்றைய தேர்தலில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள், நியமன எம்பிக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளதால் மொத்தம் 780 எம்பிக்கள் ஓட்டளிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இதையடுத்து நேற்று ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் ஓட்டளித்தனர்.
ஜெகதீப் தன்கர் வெற்றி
பின்னர் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் 780 வாக்காளர்களில் 725 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 15 வாக்குகள் செல்லாத நிலையில் ஜெகதீப் தன்கருக்கு 528 ஓட்டுக்கள் கிடைத்தன. மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மற்றும் பெற்றிருந்திார். இதனால் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வாரத்தில் துணை ஜனாதிபதியாக பதவி யேற்க உள்ளார்.
25 ஆண்டு சாதனை முறியடிப்பு
இந்நிலையில் தான் ஜெகதீப் தன்கர் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார். நேற்று நடந்த தேர்தலில் பதிவான 725 ஓட்டுகளில் 528 ஓட்டுகளை ஜெகதீப் தன்கர் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் 72.8 சதவீத ஓட்டுக்களை அவர் பெற்றுள்ளார். இதன்மூலம் கடந்த 1997 க்கு பிறகு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றவர் என்ற சாதனைக்கு ஜெகதீப் தன்கர் சொந்தக்காரரராக மாறியுள்ளார். இது முதல் சாதனையாகும்.
வெங்கையா நாயுடுவை விட அதிகம்
அதோடு தற்போதைய துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடு பெற்ற ஓட்டுக்களை விட ஜெகதீப் தன்கர் 2 சதவீதம் வரை கூடுதல் ஓட்டுக்கள் பெற்றுள்ளார். 2017 தேர்தலில் மொத்தம் 760 ஓட்டுகளில் வெங்கையா நாயுடு 67.89 சதவீத ஓட்டுக்களை பெற்றிருந்தார். இது 2வது சாதனையாகும். 2007 முதல் 2017 வரை துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரி 60.51 சதவீத ஓட்டுக்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் துணை குடியரசு தலைவர் தேர்தலை பொறுத்தமட்டில் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்த நபராக கேஆர் நாராயணன் உள்ளார். இவர் கடந்த 1992ல் நடந்த தேர்தலில் பதிவான 701 ஓட்டுகளில் 700 ஓட்டுகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்பரிவார் பின்புலம் இல்லாதவர்
ஜெகதீப் தன்கரின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் கிதானா கிராமமாகும். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து எம்பியாக ஆளுநராக மாறி தற்போது துணை ஜனாதிபதியாக மாறியுள்ளார். மேலும் ராஜஸ்தானில் இருந்து துணை ஜனாதிபதியாக ஆகும் 2வது நபர் என்ற பெயர் ஜெகதீப் தன்கருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு பைரோன் சிங் ஷெகாவத் இந்த பொறுப்பில் இருந்த நிலையில் தற்போது ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதியாகி உள்ளார். இது 3வது சாதனையாகும். மேலும் சங்பரிவார் அமைப்பின் மூலம் அரசியலை துவங்காத ஒருநபர் பாஜக சார்பில் துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இது ஜெகதீப் தன்கரின் 4வது சாதனையாகும்.