அடப்பாவமே.. ஒன்னா, ரெண்டா.. தேங்கிப்போன 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்.. காலாவதியாகப் போகுதாம்!
டெல்லி: தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள சுமார் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகவிருப்பதாக தெரியவந்துள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என அனைத்து நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தத்தொடங்கின.
இந்தியாவில் இதுவரை 167.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
இந்தியாவைப் பொருத்தவரை கோவேக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தட்டுப்பூசிகளை இரண்டு தவணைகளாக செலுத்தியது மத்திய அரசு.
ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 94.68 கோடியாகவும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 71.95 கோடியாகவும் இருக்கிறது. பூஸ்டர் டோஸ் இதுவரை 1.29 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட்
மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தியது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகள் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து தடுப்பூசி செலுத்தியது. தற்போது நாடு முழுவதுமுள்ள தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் காலாவதியாகும் என்று தெரியவந்துள்ளது. காலாவதியாகவிருக்கும் மருந்துகளை திரும்பப் பெறுவது அல்லது பதிலாகப் புதிய மருந்துகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடமும் சீரம் நிறுவனத்திடமும் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்திருக்கிறது.

திரும்பப்பெறுதல்
''இந்திய மருத்துவக் கழகத்தின் கோரிக்கை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஏனென்றால், சீரம் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளோ, எங்களது மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், மருந்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது கொள்கையிலேயே இல்லை. எந்த வகையிலும் பயன்படுத்தாத மருந்துகளை திரும்பப் பெறுவதோ, அதற்கு மாற்றாக புதிய மருந்துகளைப் பெறுவது கடினம் என்று தெரிகிறது'' என இந்திய மருத்துவக் கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறுகிறார்.

சீரம் நிறுவனம்
சீரம் நிறுவனத்தினர் கூறுகையில், ''கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு பாதுகாத்தார்கள், எந்த குளிர்நிலையில் வைத்திருந்தார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. அவை உரிய முறையில் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எனவே, அதனை நாங்கள் திரும்ப எடுத்துக்கொள்வது இயலாத காரியம். வேறு இடத்திலும் அதை பயன்படுத்த முடியாது'' என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications