அது தான் டாடா! ஒரே நாளில் அப்படியே ஏர் இந்தியா பக்கம் போன விமானிகள்.. ஸ்தம்பித்த இண்டிகோ
டெல்லி: இண்டிக்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான பல விமானங்கள் நேற்று முன்தினம் தாமதமாக இயக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்த வரை அது கடும் நஷ்டத்தில் தான் இயங்கி வந்தது. அதை மீட்க மத்திய அரசு எடுத்த முயற்சிகளும் பெரியளவில் பலன் கிடைக்காத நிலையில், அதைத் தனியாருக்கு விற்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இறுதியில் டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டாடா கைகளுக்கே ஏர் இந்தியா சென்றுள்ளது.

டாடா
ஒட்டுமொத்த ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகமும் டாடா குழுமத்திடம் வர இன்னும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வரை ஏர் இந்தியாவுக்கு கடன் கொடுக்கவே யோசித்த வங்கிகள், டாடா குழுமத்தின் கீழ் வந்த உடன் குறைந்த விலையில் கடன் கொடுக்க அவர்களாகவே முன் வந்தன. ஏனென்றால் டாடா குழுமத்தின் நிர்வாகம் குறித்து அனைவரும் அறிந்ததே!

தாமதம்
ஏர் இந்தியாவை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது. இந்தியா விமான துறையில் ஏர் இந்தியாவுக்கு இண்டிகோ கடும் போட்டியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இண்டிகோவின் உள்நாட்டு விமானங்களில் 55% சனிக்கிழமை தாமதமானது. ஏனெனில் குறிப்பிட்ட அளவு கேபின் குழு உறுப்பினர்கள் அன்றைத் தினம் விடுமுறை எடுத்தனர். அதே நாளில் தான் ஏர் இந்தியா நிறுவனத்திலும் நேர்காணல் நடந்தது.

நேர்காணல்
அதாவது இண்டிகோ ஊழியர்கள் பலரும் விடுப்பு எடுத்துவிட்டு ஏர் இந்தியா நேர்காணலுக்குச் சென்றுள்ளனர். கிட்டதட்ட சரிபாதி விமானங்கள் தாமதமாக இயங்கும் அளவுக்கு ஒரே நாளில் பலர் விடுமுறை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கணக்கில் எடுத்து உள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

நேரம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, இண்டிகோவின் உள்நாட்டு விமானங்களில் 45.2 சதவீதம் மட்டுமே சனிக்கிழமை சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. அதேநேரம் ஏர் இந்தியா (77.1 ), ஸ்பைஸ்ஜெட் (80.4), விஸ்தாரா (86.3), கோ ஃபர்ஸ்ட் (88) மற்றும் ஏர் ஏசியா இந்தியா (92.3) ஆகியவற்றை இண்டிகோவை விட சரியான நேரத்தில் இயக்கப்பட்டன.

கடும் போட்டி
இப்போது இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ தான் உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் என எல்லாம் சேர்ந்து தோராயமாகத் தினசரி 1,600 விமானங்களை இண்டிோ இயக்குகிறது. டாடாவின் ஏர் இந்தியா முழு வீச்சில் இறங்கினால் இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். அதற்கான முதல் அறிகுறி தான் இப்போதே தெரிகிறது. அதேநேரம் இது குறித்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் எவ்வித கருத்தும் கூறவில்லை.
Recommended Video

மெல்ல மீள்கிறது
கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானத்துறை உள்ளது. கொரோனா காலத்தில் இண்டிகோ விமானிகளின் சம்பளம் 30% பிடித்தம் செய்யப்பட்டன. விமான எரிபொருள் விலை உள்ளிட்ட பல காரணங்களால் சம்பளத்தை உயர்த்துவது கடினம் என்று இண்டிகோ தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் பல இண்டிகோ விமானிகள் ஏர் இந்தியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்,












Click it and Unblock the Notifications