10% இட ஒதுக்கீடு எதற்கு? என்ன புள்ளி விவர ஆதாரம் உள்ளது? ராஜ்யசபாவில் கொதித்த அதிமுக.. வெளிநடப்பு
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதி பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் நேற்று நிறைவேறிய இந்த சட்டம் இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பங்கேற்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
வரலாற்றுரீதியாக யாரெல்லாம் ஒடுக்கப்பட்டு உள்ளார்களோ அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு. ஒரு சமூகம் பயனடைவதற்காக வழங்கக்கூடியதுதான், இட ஒதுக்கீடு. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், தனிப்பட்ட நபர்களுக்கானது.
இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறினாலும் கூட இன்னமும் ஏழை நாடாக உள்ளது. இங்கே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சரியான நடைமுறை கிடையாது.
ஏற்கனவே 69% இட ஒதுக்கீடு கொண்டுள்ள தமிழகத்தில், கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகத்தான் பார்க்கமுடியும். எங்களது இட ஒதுக்கீட்டு முறையை நியாயப்படுத்துவதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன. ஆனால் உங்களிடம் அதுபோன்ற எந்த புள்ளிவிவரமாவது உள்ளதா?
அரசியல் சாசனத்தின் அடிப்படையை தகர்க்கக்கூடிய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.