ஓமிக்ரான் எதிரொலி.. கொரோனா கட்டுப்பாடுகளை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்த மத்திய அரசு.. விரிவான தகவல்
டெல்லி: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை இந்த ஆண்டு இறுதி, அதாவது வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது,
கொரோனா வைரசை இன்னும் எந்தவொரு நாடும் முழுமையாக ஒழிக்கவில்லை. சிறப்பான வேக்சின் பணிகள் மூலம் சில நாடுகள் மட்டும் கொரோனா வைரசை கட்டுக்குள் வைத்துள்ளன.
இந்தச் சூழலில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய ஓமிக்ரான் கொரோனா உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த காலங்களில் உருமாறிய வைரஸ்களை அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் :12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்
ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவும் ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்தச் சூழலில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் அனைத்து மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் வைரஸ் சோதனைகளை அதிகப்படுத்தவும் வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. புதிய ஓமிக்ரான் கொரோனாவை RT PCR மற்றும் RAT சோதனைகளில் கண்டறியலாம் என்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
டிசம்பர் 31 வரை
இதனிடையே நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு வரும் 2021 ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளது. புதிய ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியானால்?
கடந்த சில வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை முறையாகக் கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்தார். மேலும், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா உறுதியானால் தாமதமின்றி அவர்கள் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகள்
இந்தியாவில் இதுவரை யாருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரம் கடந்த காலங்களில் மற்ற உருமாறிய கொரோனா வகைகள் எப்படிப் பரவியது மனதில் வைத்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புவோருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தான் உள்நாட்டிலும் அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளது.
Recommended Video
உலக நாடுகள் அஞ்சுவது ஏன்
இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.