குஜராத் டூ டெல்லிக்கு.. ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின்- சிக்காமல் சேர்த்த ராஜஸ்தான் லாரி!
டெல்லி: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ ஹெராயின் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின் இறக்குமதி செய்யப்பட்டு டெல்லிக்கு கடத்தப்பட்டிருப்பதாக புதிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத்தில் அதானி குழுமம் நிர்வகித்து வரும் முந்த்ரா துறைமுகத்தில் ரூ21,000 கோடி அல்லது ரூ9,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அண்மையில் பிடிபட்டது. ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் தயாரிக்கப்பட்ட ஹெராயின், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குஜராத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆந்திராவை சேர்ந்த ஆஷி டிரேடிங் கம்பெனி பெயரில் முந்த்ரா துறைமுகத்துக்கு இந்த ஹெராயின் கண்டெய்னர்கள் வந்திறங்கின. முகப்பூச்சு பவுடர் என்ற பெயரில் கட்டிகளாக இந்த ஹெராயின் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் இந்த 3,000 கிலோ ஹெராயின் கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்னாச்சு.. இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. நேற்றை விட 18.4% அதிகம்!
ஹெராயின் கடத்தல்- 8 பேர் கைது
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் சென்னை தம்பதி உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஹெராயின் கடத்தல் சம்பவத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதானி குழுமம் விளக்கம்
மேலும் அதானி குழுமம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், முந்த்ரா துறைமுகத்தை நாங்கள் நிர்வகித்து வருகிறோம். ஆனால் கண்டெய்னர்களை திறந்து சோதனையிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள்தான் இத்தகைய சோதனைகளை நடத்துவர். ஹெராயின் கடத்தலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. எங்கள் குழுமத்தை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி பேசுவது உள்நோக்கம் கொண்டது என அதானி குழுமம் தெரிவித்திருந்தது.
விஜயவாடா கம்பெனி
ஹெராயினை இறக்குமதி செய்த நிறுவனம் ஆந்திராவின் விஜயவாடா புறநகர் பகுதியில் இயங்கி வரும் ஆஷி டிரேடிங் கம்பெனி. ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்வதாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் ஏற்றுமதி- இறக்குமதிக்கான லைசென்ஸ் பெற்றுள்ளது. சென்னையை சேர்ந்த சுதாகர் என்பவர்தான் இந்த உரிமத்தை வாங்கியுள்ளார். ஜி.எஸ்.டி.என். எண்ணையும் இந்நிறுவனத்துக்கு சுதாகர் வாங்கியிருக்கிறார். சுதாகரின் மனைவி வைஷாலிதான் விஜயவாடாவில் இருந்து நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.
ஜூனில் 25,000 கிலோ ஹெராயின்?
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 25,000 கிலோ எடையுள்ள ஹெராயின் அதாவது ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கண்டெய்னர்கள் இதே முந்த்ரா துறைமுகத்துக்கு ஆந்திராவின் ஆஷி டிரேடிங் நிறுவனத்தின் பெயரால் கொண்டுவரப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியை சேர்ந்த குல்தீப் சிங் என்பவர் பெயரில் இந்த கண்டெய்னர்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஹெராயின் கண்டெய்னர்களை ராஜஸ்தானின் ஜெயதீப் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான RJ01 GB 8328 என்ற எண் கொண்ட லாரியில் டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குஜராத் டூ டெல்லி- ராஜஸ்தான் லாரி
குஜராத்தில் இருந்து டெல்லிக்கு சுமார் 1,176 கி.மீ. சென்ற இந்த ராஜஸ்தான் லாரி எந்த ஒரு சுங்க சாவடியையும் கடந்து செல்லவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல். சினிமாவில்தான் வில்லன்கள் கடத்தல் பொருட்களை புறநகர், கிராமப்புற சாலைகள் வழியாக கடத்தி செல்வார்கள். அதேபாணியில் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு கிராம புற சாலைகள் மார்க்கமே ரூ75,000 கோடி ஹெராயின் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தற்போதுவரை டெல்லியில்தான் இந்த ஹெராயின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன போலீஸ் அதிகாரிகள். தற்போது டெல்லி போலீசார் பதுக்கப்பட்ட ரூ75,000 கோடி ஹெராயினை தேடும் வேட்டையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.