ஆர்யன் கான் வழக்கில் திருப்பம்.. போதிய ஆதாரமில்லை என விசாரணையை நிறுத்திய மும்பை போலீஸ்! பரபர தகவல்
டெல்லி: போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் சுமார் 22 நாட்கள் வரை சிறையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் மிரட்டி பணம் பறிந்த குற்றச்சாட்டில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று மும்பை போலீசார் வழக்கு விசாரணையை நிறுத்தியுள்ளனர்.
கடந்த அக். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதைக் கண்டறிந்த என்சிபி அதிகாரிகள், இது தொடர்பாக நடத்திய அதிரடி சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்தே போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

மும்பை உயர் நீதிமன்றம்
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி முதலில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றம் அக். 28ஆம் தேதி ஆர்யன் கான் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது.

மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டு
இந்த வழக்கில் சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் அதன் பின்னரே ஜாமீனில் விடுதலையானார். ஆர்யன் கானை சொகுசு கப்பலில் என்சிபி அதிகாரிகள் கைது செய்த போது அவரிடம் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்பதைக் குறிப்பிட்டே மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இது வழக்கு பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த போது, என்சிபி அதிகாரிகள் சிலர் ஆர்யன் கானை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப் பணம் கேட்டு மிரட்டியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை நிறுத்தம்
இந்த சூழலில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் மிரட்டி பணம் பறித்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை நிறுத்தியுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மும்பை போலீசார் இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து சுமார் 20 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை இதில் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்

என்ன புகார்
முன்னதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சாட்சியான பிரபாகர் சைல் என்பவர் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் கேட்டது தொடர்பான தொலைப்பேசி உரையாடலைக் கேட்டதாகக் கூறினார். இதன் அடிப்படையில் மும்பை காவல்துறை சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மும்பை என்சிபி அதிகாரி சமீர் வான்கடே என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் 8 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்றும் பேசியதைப் பிரபாகர் சைல் கேட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையேயான வாட்ஸ்அப் சாட்கள் அவர்கள் போதைப்பொருள் பார்ட்டிக்கு செல்ல திட்டமிட்டதைக் காட்டுவதாக என்சிபி மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து. இருப்பினும், அதில் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை என்றும் அவர்கள் சேர்ந்து அங்குச் செல்ல திட்டமிட்டார்கள் என்ப நிரூபிக்க இந்த ஆதாரம் போதுமானதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆர்யன் கானுக்கு எதிரான வழக்கில், வாட்ஸ்அப் சாட்களை தவிர என்சிபி அதிகாரிகளிடம் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையும் மும்பை ஐகோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications