ஒலிம்பிக் செல்லும் பவானியின் பயிற்சிக்காக தங்க நகைகளை தாயார் அடகு வைத்தது நெகிழ்ச்சி - மோடி
டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின் பின்னணியிலும், அவர்களின் கடுமையான போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக டோக்கியோ செல்லும் வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவியின் பயிற்சிக்காக அவரது தாயார் தங்க நகைகளை அடகு வைத்தது நெகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின் பின்னணியிலும், அவர்களின் கடுமையான போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம் தோறும் கடைசி ஞாயிறன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்றைய தினம் பேசிய பிரதமர் மோடி மிகச் சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது என்றார்.
மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்படி நான் அவரிடம் கோரிக்கைவிடுத்தேன்.

அப்பணிப்பு
நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும். மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ் ஒரு சிறந்த வில்வித்தை வீரர். அவரது பெற்றோர் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இப்போது ஜாதவ் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.

சோதனைகள் நிறைந்த பயணம்
இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை நேஹா கோயல். அவரது தாயும் சகோதரிகளும் குடும்பத்தை நடத்துவதற்காக சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். தீபிகா குமாரியின் பயணமும் சோதனைகள் நிறைந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஒரே பெண் வில்வித்தை வீராங்கனை தீபிகா.

மோடி நெகிழ்ச்சி
சென்னையைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி என்கிற பவானி ஏழ்மையான சூழ்நிலையிலும் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். அவரது பயிற்சிக்காக பவானி தேவியின் தாயார் தனது நகைகளை அடகு வைத்தது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஏழ்மையான சூழ்நிலையிலும் விடா முயற்சியுடன் பயிற்சி செய்து தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றிருக்கிறார்.

வீரர்களுக்கு உற்சாகம்
இப்படி டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின் பின்னணியிலும், அவர்களின் கடுமையான போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது. அவர்கள் தங்களுக்காக மட்டுமல்லாமல், நாட்டிற்காகவும் செல்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை சமூக வலைத்தளங்களில் #Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் என்று கூறியுள்ளார் மோடி.
Recommended Video

பவானி தேவி யார்
கடந்த 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒட்டு மொத்த தேசத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். அப்போதே "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதுதான் தன்னுடைய இலக்கு" என்றார் பவானி தேவி. அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை தற்போது நிகழ்த்தியும்காட்டியுள்ளார்.

விளையாட்டாக பிடித்த வாள்
தண்டையார்பேட்டையிலுள்ள முருக தனுஷ்கோடி பள்ளியில் தொடக்க கல்வி படித்தவர். அப்போது பள்ளியில் புதிதாக வாள் வீச்சு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. விளையாட்டாக பவானி வாள் வீச்சை தேர்வுச் செய்த தருணம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது.

விடா முயற்சியால் கிடைத்த வெற்றி
பள்ளி அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தொடர் வெற்றிகளைக் குவித்தார். இந்த வெற்றிகளால் கேரள மாநிலம் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற வாள் வீச்சுப் பயிற்சியாளரான சாகர் சுரேஷ் லாகுவிடம் வாள்வீச்சு குறித்த நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

பெற்றோரின் உறுதுணை
மற்ற போட்டிகளை போல் அல்லாமல் வாள் வீச்சு மிகவும் நுட்பமான விளையாட்டு மட்டுமல்ல அதிக பொருட் செலவுகள் கூடிய விளையாட்டாகும். பிரபலமில்லாத விளையாட்டை மகள் விளையாடினாலும் அவருக்கு உதவியாக பெற்றோர் இருந்துள்ளனர்.

வெள்ளி தங்கம் வென்ற பவானி
கடந்த 2012 ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் வெட்டரன் வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014ம் ஆண்டு இத்தாலியில் நடந்த டஸ்கனி போட்டியில் முதலிடம் பெற்றார். சர்வதேசப் போட்டியில் பவானி வென்ற முதல் தங்கம் இதுதான்.

கனவு நனவாகும் காலம்
எந்த சூழ்நிலையிலும் பயிற்சியில் இருந்து பின்வாங்காத பவானி தேவி தற்போது வாள் வீச்சு பிரிவில் உலகத் தரவரிசையில் 45வது இடத்தில் உள்ளார் பவானி தேவி. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தனது கனவு என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பவானி தேவி சொன்னது நனவாகும் காலம் நெருங்கிவிட்டது. சாதாரண குடும்பத்தில் பிறந்து ,ஒலிம்பிக்கிற்கு முன்னேறி இருக்கும் ராணி மங்காவின் மறு உருவமாக திகழும் பவானி தேவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications