பஞ்சாப் சம்பவம்.. பிரதமரை கொல்லும் முயற்சி?? பாகிஸ்தானின் சதித்திட்டம்.. பாஜக வெளியிட்ட பரபர வீடியோ
டெல்லி: பிரதமர் மோடியின் கார் நேற்று மேம்பாலத்தில் விவசாயிகளால் மறிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
Recommended Video

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் சார்ந்த பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
பிரதமர் நரேந்திர மோடியும் அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க உத்தரப் பிரதேசத்திற்குப் பல முறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார்.

பஞ்சாப்
டெல்லியில் இருந்து பதிண்டா விமான நிலையம் சென்ற அவர், பஞ்சாபின் ஹுசைன்வாலா பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்லவிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி சுமார் 100 கிலோமீட்டர் கார் மூலம் செல்ல திட்டமிடப்பட்டது.

காரில் காத்திருந்தார்
அதன்படி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வெறும் 10 கிலோமீட்டர் மட்டுமே இருந்த நிலையில், மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் காரை விவசாயிகள் மறித்தாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மேம்பாலம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பிரதமர் மோடி காத்திருந்தார். அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடி இருந்தனர். அதேபோல சில விவசாயிகள் அவரது காரின் அருகில் இருந்தனர்.

பிரதமர் மோடி
இருப்பினும், பெரும்பாலான விவசாயிகள் சில மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அருகே கூடி இருந்தனர். இப்படியே சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி காத்திருந்தார். அதன் பின்னர் வேறுவழியின்றி பிரதமர் மோடியின் கார் திரும்பியது. அப்போது போராடும் விவசாயிகளும் அந்த காருடன் செல்வதைப் பார்க்க முடிந்தது. இது தொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள் துறை அமைச்சகம்
மத்திய உள் துறை அமைச்சகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி செல்லும் வழியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டியது மாநில போலீசாரின் கடைமை. இருப்பினும், அதை அவர்கள் முறையாகச் செய்யவில்லை என்றும் போராட்டக்காரர்கள் குறித்து உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட்களை பஞ்சாப் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இது மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடு என்றும் இது தொடர்பாகப் பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் விளக்கம்
அதேநேரம் இது தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேர்மாறாக கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி காக்கத் தனது உயிரைக் கொடுப்பேன் என்றும் இருப்பினும், அது போல எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், 70.000 சேர்கள் போடப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு வெறும் 700 பேர் மட்டுமே வந்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சாலை வழியே செல்லும் திட்டம் கடைசி நிமிடத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் திட்டமா? காலிஸ்தானிகளின் திட்டமா?
இது தொடர்பாக பாஜக தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீதான தாக்குதலின் காலவரிசையைப் புரிந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பிரதமர் மோடியைத் தாக்குவது யாருடைய திட்டம் என்று தொடங்குகிறது. மேலும், "இது பாகிஸ்தானின் திட்டமா? இது காலிஸ்தானிகளின் திட்டமா? முழு திட்டத்திற்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்ததா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் அந்த சமயத்தில் முதல்வர் சரண்ஜித் சிங்கை தொடர்பு கொண்ட போது, அவர் பேசக் கூட மறுத்துவிட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜக குற்றச்சாட்டு
அந்த வீடியோவில், "பிரதமர் மீதான தாக்குதல் முயற்சியா? வன்முறை ஏற்படுத்தும் திட்டமா? பிரதமரைக் கொல்லும் முயற்சியா?" என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த அதிகாரிகளிடம் தன்னை உயிருடன் திரும்ப அனுமதித்ததற்கு நன்றி எனப் பிரதமர் கூறியதாக வெளியான செய்தி வருகிறது. பின்னர், "பாகிஸ்தான், காலிஸ்தானி ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸின் சதியைப் பிரதமர் முறியடித்தார். நாட்டைக் கலவரத் தீயில் தள்ளும் காங்கிரஸின் திட்டம் அம்பலமாகிவிட்டது" என்று கூறி அந்த வீடியோ முடிகிறது.












Click it and Unblock the Notifications