"ரூ.300 கோடி" லஞ்ச விவகாரம்! காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ விசாரணை!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் 300 கோடி ரூபாய் லஞ்ச விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக்! இவர் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை காஷ்மீர் ஆளுநராக இருந்தார்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, இரு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன் வந்ததாக சத்யபால் மாலிக் பரபர குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.
காஷ்மீரைத் தொடர்ந்து அவர் கோவா ஆளுநராக 2019- 2020 வரை இருந்தார். அதைத் தொடர்ந்து மேகாலயா ஆளுநராக 2020 முதல் கடந்த அக். 3ஆம் தேதி வரை இருந்தார். ஆளுநர் பதவிக் காலம் முடிந்த சில நாட்களிலேயே இப்போது காஷ்மீரில் சிலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கூறிய புகார் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கிரு நீர் மின் திட்டம் தொடர்பான 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க தன்னிடம் 300 கோடி ரூபாய் லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன்வந்ததாக அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், இப்போது சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். இவர் காஷ்மீரில் ஆளுநராக இருந்த போது தான், காஷ்மீரில் சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications