கோவை சம்பவம்: தனி ஓநாய் முறையில் தாக்குதல் திட்டம்.. கோவில்களை நோட்டமிட்டு ஒத்திகை! அதிர்ச்சி தகவல்
டெல்லி: கோவை கார்வெடிப்பு தனி ஓநாய் தாக்குதல் முறையில் தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதில் உயிரிழந்த ஜமேஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களான அசாரூதின் மற்றும் அப்சர்கானுடன் சேர்ந்து சங்கமேஸ்வரர், கோணியம்மன், விநாயகர் கோவில்களை நோட்டமிட்டு ஒத்திகை பார்த்துள்ளனர் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
கோவை உக்கடம் அருகே கடந்த 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கோவில் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐ ஏ)க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
இந்த சூழலில் கோவை கார்வெடிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

கோவில்களில் நோட்டம்
ஜமேஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களான அசாரூதின் மற்றும் அப்சர்கானுடன் சென்று சங்கமேஸ்வரர், கோணியம்மன், விநாயகர் கோவில்களை நோட்டமிட்டு ஒத்திகை பார்த்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜமேஷா முபீன் தனது உறவினர்கள் அசாரூதின் மற்றும் அப்சர்கானுடன் சென்று காந்தி பார்க்கில் 3 சிலிண்டர்களை வாங்கியிருக்கின்றார்.

மிகப்பெரும் தாக்குதல் நடத்த சதி
மேலும் பழைய மார்க்கெட் பகுதிக்கு சென்று டிரம்களை வாங்கி அதில் ஆணிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை போட்டு அதை வாகனத்தில் வைத்து இருந்திருக்கின்றனர். அதன் பிறகு அதை வாகனத்தில் வைத்து கொண்டு வந்துருக்கின்றனர். இந்த சம்பவங்களை பார்க்கும் போது மிகப்பெரும் தாக்குதலை நடத்துவதற்கான சதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ விசாரணை தொடங்கும் முன்பே பல்வேறு முக்கிய தகவல்களை தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒற்றை ஓநாய் தாக்குதல்
இந்த சம்பவம் திட்டமிட்ட ஒன்றானதாக இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. அதுவும் இந்த தக்குதலானது Lone wolf attack என்ற ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையிலானதாக இருக்காலம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதாவது தீவிரவாத சிந்தனை உடையவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதே ஒற்றை ஓநாய் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு நபர்களுக்கு தொடர்பா
எனவே, இந்த விவகாரத்திலும் எந்த ஒரு அமைப்புகளுடன் தொடர்பு இல்லாமல் தனியாக இயங்கி தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஒற்றை ஒநாய் தாக்குதல் என்பது பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதால், வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற ஐயமும் போலீசாருக்கு எழாமல் இல்லை.

முழுமையான தகவல்கள்
என்.ஐ.ஏ விசாரணையின் போது இந்த தாக்குதல் திட்டம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளிவரும். குறிப்பாக வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா.. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா போன்ற விவரங்கள் என்.ஐ.ஏவின் விரிவான விசாரனைக்கு பிறகு தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications