மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறிய தலித்துக்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்க மத்திய அரசு 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் பட்டியல் சாதிகள் ஆணை - 1950 ன் படி இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்தவர்களை எஸ்.சி. (பட்டியலின) வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது.
தீண்டாமை நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருப்பதால் பட்டியலின மக்கள் பிரிவில் இந்துக்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று 1950 ஆம் ஆண்டு வெளியான உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நீண்ட கால கோரிக்கைகள்
அதன்பிறகு, சீக்கியம் மற்றும் பவுத்தம் ஆகியவையும் இந்து மதத்தின் கிளையாக எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களையும் பட்டியலின மக்கள் பட்டியலில் சேர்க்க 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இணைக்க உத்தரவு வெளியாகி இருந்தது. இந்துவாக இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் மதங்களுக்கு மாறியிருக்கும் தலித்களுக்கும் எஸ்.சி வகுப்பினருக்கு உரிய சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

பாஜக எதிர்ப்பு
ஆனால், இந்த கோரிக்கைகளுக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதம் மாறிய தலித்களுக்கும் இட ஒதுக்கீட்டை அளிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அரசின் நிலைப்பாட்டை 3 வாரங்களுக்குள் தெரிவிப்பதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை வரும் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டது
இந்த நிலையில், மத்திய அரசு கமிஷன் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 3 உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பாணையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டது.

2 ஆண்டுகளுக்குள் அறிக்கை..
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த கமிஷன், பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித் பிரிவினருக்கு எஸ்.சி வருப்பினருக்கான அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை கிடைக்கும். தலித்துகள் மதம் மாறிய பிறகு, சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை இந்த கமிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

இட ஒதுக்கீடு சலுகை கிடைக்கும்
அதேபோல், இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித் பிரிவினருக்கு எஸ்.சி வருப்பினருக்கான அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு சலுகை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications